ஹாங்காங்: தென்சீனக் கடலில் 62 பயணிகளுடன் சென்ற வியட்னாமிய வர்த்தகக் கப்பல் சனிக்கிழமை (ஜூலை 25) மாலை 6.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஒரு பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூழ்கிவிட்டது.
கப்பலில் இருந்தவர்களில் 39 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஆயினும் மீதம் உள்ள 23 நபர்களைக் காணவில்லை. அவர்களை மீட்கும் தீவிரப் பணியில் வியட்னாமிய அதிகாரிகளும் சீன அதிகாரிகளும் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனர்.
‘கோய் நியுயென் 18’ என்ற பெயருடைய அக்கப்பல், சம்பவத்தன்று ‘ஃபியரி க்ராஸ்’ எனப்படும் கடற்பாறைகள் நிறைந்த பகுதியில் சிக்கிக்கொண்டது. அச்சமயம் அது ஆபத்துக்குள்ளான அவரச உதவிகோரி அதற்கான சமிக்ஞையை விளக்கொளியுடன் வெளியிட்டது.
அதனை முதலில் கண்டறிந்த சீனாவின் ‘நான்ஹாய் ஜூ 115’ எனப்படும் மீட்புக் கப்பல் உடனடியாக பாறைப் பகுதிக்கு விரைந்தது. வியட்னாமின் மீட்புக் கப்பலுடன் பல சீன கப்பல்களும் இணைந்து நீரில் தத்தளிப்போரைத் தேடின.
மொத்தம் ஆறு சீனக் கப்பல்களுடன் ஒரு ஹெலிகாப்டரும் வியட்னாமின் கப்பலுக்குத் துணையாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
விபத்துக்குள்ளான கப்பல் சுமார் 70 மீட்டர் நீளமும் 999 டன் எடையும் கொண்டது. விபத்தில் சிக்கிய அனைவரும் வியட்னாமியர்கள் என்ற விவரங்களை சீனாவின் தென் மாநிலமான ஹைனான் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

