மே 1 ஆம் தேதி தொடங்கிய சீனாவின் ஐந்து நாள் மே தின விடுமுறையின்போது சிங்கப்பூருக்கு வந்த சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அந்த ஐந்து நாள்களில் வருகை எண்ணிக்கை குறைந்தது 20 விழுக்காடு அதிகரித்ததாக சுற்றுலா முகவர்கள் தெரிவித்தனர்.
சீனாவின் மிகப்பெரிய இணைய பயண நிறுவனமான ‘சிட்ரிப்’-ஐ இயக்கும் trip.com குழுமம், 2019ன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் மே 1 முதல் மே 5 வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்கான விமான முன்பதிவுகளில் 20% அதிகரிப்பைப் பதிவு செய்தது.
“பிப்ரவரியில் நடப்புக்கு வந்த விசா நீக்கம், சீனப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதற்கு நிச்சயமாக ஒரு முக்கியக் காரணம்,” என்று trip.com-ன் சிங்கப்பூர் பொது மேலாளர் எட்மண்ட் ஓங் கூறினார்.
சீனப் பயண நிறுவனமான டோங்செங் டிராவல் இணையத் தளத்தில், மே மாத ‘கோல்டன் வீக்’ விடுமுறையில் சிங்கப்பூர் செல்வதற்கான விமானச் சேவை, ஹோட்டல் முன்பதிவுகள் ஆண்டு அடிப்படையில் இரு மடங்காக அதிகரித்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஹோட்டல், சுற்றுலாக்கள் உட்பட சிங்கப்பூரில் சுற்றுலாவுக்குப் பதியும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை 80% வரை அதிகரித்துள்ளதாக ‘குளூக்’ பயணப் பதிவு இணையத் தளம் குறிப்பிட்டது.
மே மாத முதல் வாரத்தின் வருகையாளர் எண்ணிக்கை இன்னும் தயாராகவில்லை என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது.