ஜகார்த்தாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள தூதரகம் அறிவுறுத்து

ஜகார்த்தாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள தூதரகம் அறிவுறுத்து

1 mins read
3d6b50af-3539-415f-9e7b-9aee80c9df44
முக்கியமான ஆவணங்கள், பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படியும் எதிர்பாராத தாமதம் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கும்படியும் ஜகார்த்தாவில் இருக்கும் சிங்கப்பூர் தூதரகம் அங்கிருக்கும் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. கனமழையால் தெருவெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் இன்னும் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதால் அங்கு இருக்கும் சிங்கப்பூரர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கியமான ஆவணங்கள், பொருட்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படியும் எதிர்பாராத தாமதம் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கும்படியும் அது குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் இணையப் பக்கத்தில் (https://eregister.mfa.gov.sg) பதிவு செய்துகொள்ளுமாறும் தூதரகம் அங்குள்ள சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜகார்த்தாவிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருவெள்ளம், நிலச்சரிவுகள் போன்றவை ஏற்பட்டிருப்பதையடுத்து இந்த அறிவிப்பை தூதரகம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஆக அதிகமான மழை பொழிந்ததையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் வெள்ளம் சூழ்ந்த தங்களது வீடுகளுக்குச் செல்ல இயலாததால் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

அங்கிருக்கும் சிங்கப்பூரர்கள் அவசர காலத்தில் தூதரக உதவிகளைப் பெற 62-811-863-348 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். வெளியுறவு அமைச்சின் 63798800, 63798855 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்