திரு முத்துசாமி பற்றி உள்ளூர் எழுத்தாளரான திருமதி கமலாதேவி அரவிந்தன் நினைவுகூர்ந்தார். செய்தி, படங்கள்: தேசிய நூலக வாரியம்
தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு, இயற்கை எய்திய தமிழ் எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் நோக்கத்தோடு 'நினைவின் தடங்கள்' என்ற ஒரு புதிய முயற்சியை முதன்முறையாகக் கடந்த ஆண்டு மேற்கொண்டது. எழுத்துச் சமூகத்திடமிருந்து அதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த நிகழ்ச்சியை தேசிய நூலக வாரியம் நேற்று நடத்தியது. இவ்வாண்டு இயற்கை எய்திய தமிழ் எழுத்தாளர்களையும் படைப்பாளர்களையும் கெளரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ச.ஞாநி, பாலகுமாரன், ம.இலெ. தங்கப்பா, கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, கலைஞர் மு கருணாநிதி, மலேசிய எழுத்தாளர்கள் துரைராஜ், ஆதி இராஜகுமாரன் என எழுவர் நினைவுகூரப்பட்டனர்.
நாற்பது ஆண்டுகளாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வந்த திரு ஞாநி, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இயற்கை எய்தினார். 40க்கும் மேற்பட்ட நாடகங்களையும் 40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா' என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார். தமிழுக்கான அவரது பங்களிப்புப் பற்றி உள்ளூர்க் கவிஞரும் எழுத்தாளருமான திரு நெப்போலியன் பேசினார்.
கடந்த 1946ஆம் ஆண்டு பிறந்த எழுத்தாளர் பாலகுமாரன் நாவல்கள், சிறுகதைகள் மூலம் தமிழ் இலக் கியத்திற்குப் பெரும் பங்காற்றியவர். 150 நாவல்களும் 100 சிறுகதை களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய கதைத் தொடர்கள் தமிழ்நாட்டின் ஆனந்த விகடன், குமுதம், கல்கி ஆகிய வார இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகளைத் தீவிரமாக வாசித்து வளர்ந்த திருமதி வித்யா அருண், பாலகுமாரனின் இலக்கியப் பங்களிப்பைப் பற்றி பேசினார். குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றவர் திரு ம.இலெ.தங்கப்பா. கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது ஆந்தைப் பாட்டு மிக முக்கியமான பகடி இலக்கியமாகும். மரபு மற்றும் நவீனத் தமிழிலக்கிய வாசிப்பில் ஆர்வமுள்ள திரு சிவானந்தம் நீலகண்டன், திரு தங்கப்பாவின் இலக்கியப் பங் களிப்புப்பற்றி உரையாற்றினார். தமிழகத்தில் பிறந்து, சிங்கப்பூரில் பணிபுரிந்து பின்னர் மலேசியாவில் முத்திரை பதித்தவர் திரு துரைராஜ். 1955ல் சிங்கப்பூரில் புதுயுகம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றி னார். இங்கு வெளிவந்த மலாய நண்பன் நாளிதழின் துணை யாசிரியராகிப் பின்னர் நிர்வாகி யானார்.