லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் ஓர் ஆசிரியை 25 அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் வேலை பார்த்ததாகவும் கடந்த 13 மாதங்களில் அவர் ரூ. 1 கோடி ஊதியம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் உடனடியாக இது பற்றி விசாரிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மெயின்புரி என்ற நகரைச் சேர்ந்த அனாமிகா சுக்லா என்ற அறிவியல் ஆசிரியை பல மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிக்கூடங்களில் பணிபுரிவதாகப் பதிவேடு தெரிவிக்கிறது. 13 மாதங்களாக இவருக்கு ரூ. 1 கோடி ஊதியம் கிடைத்துள்ளது.
இணையத்தில் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதால் சந்தேகம் எழாமலேயே இருந்து வந்தது.
இந்த நிலையில், மாநிலத்தில் அனைத்து ஆசிரியர்களின் தகவல்களும் கணினியில் பதியப்பட்டபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இது எப்படி நிகழ்ந்தது என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்று மாநில பள்ளிக் கல்வி இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அதிகாரி கள் யாரேனும் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.