புதுடெல்லி: இந்தியாவின் எல்லைப்பகுதியில் சீனா தனது ராணுவ பலத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா- சீனா இடையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்த வண்ணம் உள்ளது. கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இதுபோன்ற சம்பவத்தின்போது இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
அதன்பின் இந்தியா எல்லை அருகே பாதுகாப்பை அதிகரித்துள்ளது. சீனாவும் கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது.
கல்வான் அல்லது கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் இந்தியாவும் சீனாவும் 20 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன. 20வது சுற்றுப் பேச்சுவார்த்தை அக்டோபர் 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருநாடுகளுமே எல்லைகளில் பாதுகாப்புப் படைகளை கணிசமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படியே நமது ராணுவம் எல்லைகளில் கணிசமான பாதுகாப்புப் படையினரை விலக்கிக் கொள்ளவும் செய்தது.
தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் அறிக்கை புதிய தகவல்களைத் தெரிவிக்கிறது.
டோக்லாம், பாங்காங் ஏரி போன்ற எல்லைப் பகுதியில், சாலைகள் அமைத்தல், இரு பயன்பாட்டுக்கான விமான நிலையம் அமைத்தல், பல்வேறு ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் கடந்த ஆண்டு சீனா ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்த இரு பகுதிகளுமே இந்தியா-சீனா இடையே ராணுவ மோதல் நிகழ்ந்து பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியவை.