செடி அலங்காரத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் வீட்டிலும் அலுவலகத்திலும் செடிகளையும் பூக்களையும் வளர்ப்பது வழக்கம். அவற்றை அழகான ஜாடிகளில் வைப்பதும் உண்டு.
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மேல் உருவான ஒரு கலையாகக் கூறப்படும் 'கொக்கிடாமா' (Kokedama) என்ற ஜப்பானிய செடி அலங்காரக் கலைக்கு ஜாடிகளுக்குப் பதிலாக பாசி உருண்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
செடி அலங்காரத்துடன் நீடித்த நிலைத்தன்மை ஆர்வலர்களாக இருப்போருக்கு மத்தியில் 'கொக்கிடாமா' புகழ்பெற்ற ஒரு கலையாக உள்ளது.
ஆரோக்கியத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் ஓர் இயற்கைச் சூழலைப் பழங்கால ஜப்பானிய மக்கள் உருவாக்க முயன்றதன் விளைவாக இந்தக் கலை பிறந்ததாக நம்பப்படுகிறது.
காற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட கொக்கிடாமா, மன உளைச்சலையும் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் எதிர்மறை உணர்வுகளை நீக்கும் ஆற்றல் கொக்கிடாமாவுக்கு உள்ளது என்பர். புதுமையான அலங்காரமாகக் காட்சியளிக்கும் கொக்கிடாமா, சில சமயம் தொங்கவிடப்படுவதும் உண்டு.
வெளிப்புறங்களிலும் வைப்பதற்கு ஏற்ற இச்செடிகளைப் பராமரிப்பது மிக எளிதாக உள்ளது என்று கூறப்படுகிறது.