நீரிழிவு நோய் வராமல் தடுக்க இனிப்பு பானங்கள் குடிப்பதைக் குறைத்து, அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளும்படி டாக்சி ஓட்டுநர்களை ஊக்குவித்தது தேசிய டாக்சி சங்கம். டாக்சி ஓட்டுநர்களிடையே நீரிழிவு நோய் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த நேற்று கிட்டத்தட்ட 250 டாக்சி ஓட்டுநர்கள் தேசிய டாக்சி சங்கம் ஏற்பாடு செய்த மூன்று கிலோமீட்டர் மெதுநடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். "நீரிழிவை ஓட்டிவிடுங்கள்" (Drive away diabetes) எனும் அந்த மெதுநடை நிகழ்ச்சியில் டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
மெதுநடைக்கு முன்பாக நடைபெற்ற தாய்- சீ சீன உடற்பயிற்சி அங்கத்தில் அனைவருடன் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கும் கலந்துகொண்டு மெதுநடையைத் தொடக்கி வைத்தார். நீரிழிவு நோயும் அதனால் ஏற்படும் இதர சுகாதார பிரச்சினைகளும் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புச் சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகின்றன. ஆனால் இந்த நோய் தடுக்கக் கூடிய ஒன்று. இந்த நோயால் சிகிச்சை, ஆள்பலப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் எழுந்து சிங்கப்பூர் பொருளியலுக்கு ஆண்டுக்கு $1 பில்லியன் இழப்பு ஏற்படுகிறது.
டாக்சி ஓட்டுநர்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மெதுநடையைத் தொடக்கி வைத்த சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (வலமிருந்து மூன்றாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்