கிராஞ்சியில் உள்ள சிங்கப்பூர் குதிரைப் பந்தயத் திடலின் சில பகுதிகள் கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து குணமடையும் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைப்பதற்கான சமூக மீட்பு வசிப்பிடங்களாக மாற்றியமைக்கப்பட இருக்கின்றன.
பந்தயத் திடலில் உள்ள பல அடுக்கு கார் நிறுத்தப் பூங்கா, கார்நிறுத்தப் பூங்கா ‘பி’, குதிரைப் பந்தய மையத்தில் அமைந்துள்ள கூரை வேயப்பட்ட அரங்கு உள்ளிட்டவை சமூக மீட்பு வசிப்பிடங்களாக உருமாற்றம் காணும் என்று சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் ஓர் அறிக்கை மூலம் நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றமும் சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகமும் அரசாங்கத்துடன் இணைந்து அந்தப் பகுதிகளைச் சமூக மீட்பு வசிப்பிடங்களாக மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ளும். இம்மாத இறுதிவாக்கில் அவ்விடங்கள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அரசாங்க அமைப்புகள் அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று குதிரைப் பந்தய மன்றம் தெரிவித்தது.
கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் நடப்பில் இருந்து வரும் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தின் எதிரொலியாக குதிரைப் பந்தய மன்றமும் மூடப்பட்டிருக்கிறது.
அமோய் கீ, பிடோக், ஜூரோங், குலிமார்ட், லி சூ காங் ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் ஆயுதப் படை முகாம்கள் உள்ளிட்ட மற்ற சமூக மீட்பு வசிப்பிடங்களில் சென்ற மாதம் 28ஆம் தேதி முதல் கிருமித்தொற்றில் இருந்து தேறி வருவோர் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
ஜூன் மாத இறுதிவாக்கில் அத்தகைய வசிப்பிடங்களில் 10,000த்திற்கும் அதிகமான படுக்கைகள் இருக்கும் என்று அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
மருத்துவமனைகள் மற்றும் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களுடன், வெவ்வேறான தேவைகளுடன் கூடிய கொரோனா கிருமித்தொற்று நோயாளிகளுக்கு வெவ்வேறான பராமரிப்பை வழங்கும் உத்திகளின் ஒரு பகுதியாக இத்தகைய வசிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இலேசான கிருமித்தொற்று அறிகுறிகள் உள்ளோரும் குறைந்த அபாயம் இருப்பவர்களும் சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் 1842ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் ஆகப் பழமையான, ஒரே ஒரு குதிரைப் பந்தய மன்றமுமான அது உலகத் தரம் வாய்ந்த குதிரைப் பந்தய விளையாட்டு வசதிகளைக் கொண்டிருக்கிறது.
கிராஞ்சியில் உள்ள சிங்கப்பூர் குதிரைப் பந்தயத் திடலை பந்தயங்களை நடத்தி, நிர்வகிப்பது அம்மன்றத்தின் பணி.
“கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் பந்தயப் பிடிப்புக் கழகமும் குதிரைப் பந்தய மன்றமும் சிங்கப்பூருடனும் அனைத்து சிங்கப்பூரர்களுடனும் ஒற்றுமையாகக் கைகோத்து நிற்கின்றன. இந்தப் பெரும் சவாலில் இருந்து சிங்கப்பூர் விடுபட உதவுவதில் நாம் அனைவரும் நமக்கான பங்கை ஆற்ற வேண்டும் என்பதால் பங்காளிகள் அனைவரும் இதனைப் புரிந்துகொண்டு, பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்,” என்று குதிரைப் பந்தய மன்றம் தெரிவித்துள்ளது.