பீச் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடவர் ஒருவரைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று 55 வயது சிங் ஹோக் சூன் எனும் சிங்கப்பூரர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் பீச் ரோடு புளோக் 5க்கு அருகில் உள் புல்வெளியில் 67 வயதான திரு மிஸ்கிமான் மாக்கிப் எனும் ஆடவரை அவர் கொலை செய்தார் என்பது குற்றச்சாட்டு.
சம்பவத்தின் தொடர்பில் அன்று பிற்பகல் 3 மணிக்கு போலிசுக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், திரு மிஸ்கிமான் அசைவற்றுக் கிடந்ததைக் கண்டனர். அவர் மருத்துவ வண்டியில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் மாண்டுவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்ககிழமையன்று ஒரு சீன ஆடவர் மற்றொருவரின் முகத்திலும் தலையிலும் குத்துவதைப் பார்த்ததாக, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ஷின் மின் சீன நாளிதழிடம் கூறினார்.
குற்றம் சுமத்தப்பட்ட சிங், சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்.