உரிமையாளரின் அனுமதியின்றி அவரது காரை ஓட்டி விளையாட்டு மைதானத்தில் அதனை மோதச் செய்த 24 வயது பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்தது. ஜாலான் பசாரில் நடந்த விபத்து பற்றிய தகவலை காலை 11.42 மணிக்குப் பெற்றதாக போலிசார் ஸ்டாம்ப் செய்தித்தளத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது கூறினர்.
பாதசாரிகளின் நடை பாதையில் ஏறி விளையாட்டு மைதானத்திற்கு காரை ஓட்டிய அந்தப் பெண், இருக்கை ஒன்றை இடித்தபோது காரை நிறுத்தியதாக வழிப்போக்கர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட காரில் பெண் ஓட்டுநருடன் பெண் பயணியும் இருந்ததாக ஸ்டாம்ப் தெரிவித்தது.
போலிசார் அந்தப் பெண்கள் இருவரையும் விசாரித்தபோது இருவருமே அந்தக் காரை ஓட்டவில்லை என்று கூறினர். உண்மையான ஓட்டுநரைக் கண்டுபிடித்த போலிசார் பின்னர் இவர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் இருவருக்குமே சின்னஞ்சிறு காயங்கள் ஏற்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்விருவருமே மற்றொரு விபத்தில் இதுபோல காயமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது..