இரு நண்பர்களோடு புலாவ் உபின் தீவில் செப்டம்பர் 27ஆம் தேதி சைக்கிள் உலா சென்ற பிலிப்பீன்ஸ் பணிப்பெண் அசம்பாவிதத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதன் காரணமாக பத்து நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கலாபினி மரிலாவ் கார்சியா, 50, எனப்படும் அந்தப் பெண்ணின் மூளையில் வீக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அந்த ஞாயிற்றுக்கிழமை பொழுதைக் கழிக்கச் சென்றபோது அந்தப் பெண்ணுக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாக்கப்படவில்லை. காரணம் அவரது நண்பர்கள் வேறு இடத்தில் சென்று கொண்டிருந்தனர். பாதை இறக்கத்தின் கீழ் வந்து பார்த்தபோது தான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக அவர்கள் சந்தேகித்தனர். தனது சைக்கிளின் அருகே விழுந்து கிடந்தார் குமாரி கார்சியா.
“அப்போதுகூட அவர் சுயநினைவோடு இருந்தார். காயங்களோ ரத்தக்கசிவோ இல்லை. என்னுடைய மடியில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தபோது தலைசுற்றுவதாக கார்சியா கூறினார்,” என நியூ பேப்பர் செய்தித்தாளிடம் பணிப்பெண்ணின் தோழியான கிளாரிசா ரிக்டாவ் தெரிவித்தார்.
அவ்வழியாகச் சென்ற இருவர் உதவ முன்வந்ததாகவும் பின்னர் போலிஸ் அழைக்கப்பட்டதாகவும் கூறிய அவர் போலிஸ் வரும் முன்னரே கார்சியா வாந்தி எடுத்ததாகத் தெரிவித்தார். சுயநினைவோடு சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததாக அவரது வீட்டு முதலாளியான திருவாட்டி ஜெனட் மோக் கூறினார்.
மூளையில் காயமடைந்த பகுதி அப்பெண் வாய் பேச முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என்றும் நினைவை இழக்கும் நிலையும் ஏற்படலாம் எனவும் மருத்துவர் கூறியதாக திருவாட்டி ஜெனட் தெரிவித்தார். 10 நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பெண் பின்னர் மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறி னார்.