சிங்கப்பூரில் ரெட்ஹில் குளோசுக்கு அருகில் சிறுவர் இருவர் அபாயகரமான முறையில் சாலையைக் கடந்தது ‘ஸ்டோம்ப்’ வாசகரின் கவனத்தை ஈர்த்ததுடன், இத்தகைய செயலில் ஈடுபடும் சிறுவர்களின் பாதுகாப்பு பற்றிய அக்கறையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 26) மாலை 6.30 மணியளவில் ரெட்ஹில் குளோசுக்கு அருகில் சிறுவர் இருவர் சாலை பிரிப்பானில் நின்று கொண்டிருந்ததை ‘ஸ்டோம்ப்’ வாசகர் ஆண்ட்ரூ பார்த்தார்.
அவ்விருவரில் சிறுவன் ‘ஸ்கேட்போர்டு’ ஒன்றில் அமர்ந்திருந்தார். அந்த ‘ஸ்கேட்போர்டு’ மீது கால் வைத்தபடி சிறுமி நின்றிருந்தார். இருவரும் சாலையைக் கடப்பதற்காக வாகனங்கள் வருகின்றனவா என்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
அது சாலையைக் கடப்பதற்கான இடம் இல்லை. அந்த நேரத்தில் பேருந்துகள் உட்பட வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த சாலை.
பின்னர் ‘ஸ்கேட்போர்டின்’ மீது கால் வைத்தபடி அந்தச் சிறுமி அதனைத் தள்ளிக்கொண்டு சாலையைக் கடந்தார். சிறுவன் ‘ஸ்கேட்போர்டில்’ அமர்ந்தபடி இருந்தார்.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியும் ஸ்டோம்பில் பதிவேற்றப்பட்டது.