ஆண்டுதோறும் ஆனந்தபவன் உணவக ஆதரவுடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கி வரும் 2000 வெள்ளி மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு இந்த ஆண்டு, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ எழுதிய “அங்குசம் காணா யானை “ என்ற கவிதை நூலுக்கு வழங்கப்பட்டது.
புத்தகப் பரிசுத் திட்டத்தின் 11ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா கடந்த 28-11-2020, சனிக்கிழமையன்று மாலை 5.30 மணிக்கு ‘ஸும்’ வலையொளி வாயிலாக இணையத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் வெற்றியாளருக்கு புத்தகப் பரிசு வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ்ப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் உள்ளதுபோல வெளியீட்டுக்கு முன்னரே விமர்சனங்கள், கருத்துகளை கேட்டுச் சரிசெய்யும் முறையைப் பின்பற்றவும் முனைவர் சித்ரா சங்கரன் ஆலோசனை வழங்கினார்.
2020ஆம் ஆண்டின் புத்தகப் பரிசு தேர்வுக் குழுவில், இணைப்பேராசிரியர் முனைவர் ஆ ரா சிவகுமாரன், தமிழகக் கவிஞர் தங்கம் மூர்த்தி, மலேசிய கவிஞர் முனைவர் பச்சைபாலன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
போட்டிக்கு 12 கவிதை நூல்கள் கிடைக்கப்பெற்றன.
சிறுகதை, கவிதை, கட்டுரை என சுழற்சி முறையில் நடைபெறும் புத்தகப் பரிசு அடுத்த ஆண்டு கட்டுரை நூலுக்கு வழங்கப்படும் எழுத்தாளர் கழகம் தெரிவித்தது.
நிகழ்வில் சிங்கப்பூர், இந்தியா, மலேசியா நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் பங்குபெற்றனர்.