இல்லத் தனிமை உத்தரவின் கீழ் சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்களில் தற்போது தங்கியிருக்கும் சுமார் 12,000 பயணிகள், புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, கூடுதலாக ஒரு வாரத்துக்கு அங்கேயே இருப்பார்கள்.
இங்கு வரும் பயணிகள் இல்லத் தனிமை உத்தரவின் கீழ் 21 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் கட்டுப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடப்புக்கு வந்தது. அப்போது சிங்கப்பூர் வந்த பயணிகள் பெரும்பாலோர் நீட்டிக்கப்பட்ட தனிமை உத்தரவைப் பற்றி தெரிந்து வைத்திருந்தனர்.
ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் இங்கு வந்து, இல்லத் தனிமை உத்தரவின் கீழ் ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் புதிய கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கவில்லை.
பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் ஹோட்டல்கள், அவர்கள் கூடுதலான நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவித்தன. உள்ளூரில் ஹோட்டல் விடு முறைகளை வழங்கி வந்த சில ஹோட்டல்கள் இப்போது இல்லத் தனிமை உத்தரவுக்கான ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு விடுமுறையில் தங்க பதிவு செய்திருந்தவர்களுக்கு இந்த மாற்று ஏற்பாடு ஏமாற்றம் அளித்துள்ளது. விடுமுறைத் திட்டத்தைத் தள்ளி வைக்க அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் பயணிகளால் கொவிட்19 சமூகத்தில் தொற்றும் அபாயத்தைக் குறைக்க, சுகாதார அமைச்சு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தன.
ஆஸ்திரேலியா, புருணை, சீனா, நியூசிலாந்து, தைவான், ஹாங்காங், மக்காவ் ஆகிய இடங்களைத் தவிர்த்து வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் 14 நாட்களுக்கு பதில் 21 நாட்களுக்கு இல்லத் தனிமை உத்தரவின் கீழ் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் இல்லத் தனிமை உத்தரவு நிறைவு பெறாதவர்களும் அக்கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டனர். அதனால் அத்தகையோரும் மேலும் 7 நாட்கள் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்க வேண்டும்.
இதனால் பயணிகள் எதிர்பார்க்காத கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன.
ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமையில் தங்குவதற்கான செலவு சுமார் $2,000 வெள்ளியாக இருந்தது. இன்னும் 7 நாட்கள் தங்கி இருப்பதற்கும் மேலும் ஒரு கொவிட்-19 பரிசோதனைக்கும் பயணிகள் கூடுதலாக சுமார் $1,200 செலுத்த வேண்டிவரலாம்.
தனிமை உத்தரவு நீட்டிக்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்னரே இங்கு ஹோட்டல்களில் தங்கி இருப்போருக்கு அரசாங்கமே அச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சில பயணிகள் கருத்துரைத்தனர்.
பயணிகளே அச்செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளன.
ஆனால் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாதவர்கள் உரிய சான்றுகளைத் தந்து மேல்முறையீடு செய்யலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியது.