தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் நீட்டிக்கப்பட்டதால் சிங்கப்பூரர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 14 நாட்கள் தனிமையில் தங்க வேண்டும் என்ற உத்தரவு நடப்பில் இருந்தது. ஆனால் கடந்த சனிக்கிழமை கூடுதலாக ஒரு வாரம் தங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனிமைக் காலத்திற்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 57 வயது சிங்கப்பூரரான ஹேரி ஹோ கூறியுள்ளார்.
இம்மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தத் திட்டம் தற்போது பாழாகிவிட்டதாக கம்போடியாவின் நோம்பென்னில் பணியாற்றி வரும் ஹேரி ஹோ கூறினார்.
ஏப்ரல் 29ஆம் தேதி சிங்கப்பூர் வந்த அவர், முந்தைய 14 நாட்கள் தனிமைப்படுத்தும் உத்தரவுக்கு ஏற்ப தமது பயணத்தை திட்டமிட்டிருந்தார்.
"என்னுைடய எல்லா நிகழ்ச்சிகளையும் மாற்ற வேண்டியதாகிவிட்டது. நோம்பென்னுக்குத் திரும்பிச் செல்வதும் தாமதமாகிவிட்டது," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கு முன்பே தனிமைப்படுத்தும் காலம் 21 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்பது தெரிந்திருந்தால் என்னுடைய பயணத்ைத மாற்றியமைத்திருப்பேன் அல்லது மாற்றுத் திட்டங்களை தீட்டியிருப்பேன் என்றும் அவர் சொன்னார்.
திரு ஹோ, சில மாதங்களுக்கு ஒரு முறை கம்போடியாவுக்கும் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தமது பணியில் இடையூறு ஏற்படாமல் இருக்க சிங்கப்பூருக்கான பயணத்தை ஒத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் திரு ஹோ.
சிங்கப்பூர் வந்து இறங்கியதும் பிசிஆர் சோதனையைத் தவிர மற்றவற்றுக்கு அவர் 2,000 வெள்ளி செலுத்தியிருந்தார். ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டதால் கூடுதலாக 1,200 வெள்ளியை அவர் செலவழிக்க வேண்டும்.
இந்தச் செலவுகளைக் குறைக்க குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தை அவர் அணுகிய போது, கோரிக்கை விடுத்தால் பரி சீலிப்பதாகக் கூறியுள்ளது.