கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக கடந்த இரண்டு வாரங்களில் 24 உணவு, பானக் கடைகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது.
அவற்றில் கோப்பிதியாம், டெலிஃபிரான்ஸ் கடைகளும் அடங்கும். கடைகளை மூடும்படி 15 கடைகளுக்கு உத்தரவிடப்பட்டது.
மற்றவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தெரிவித்தது.
கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 24 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வார காலத்தில் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 3,500க்கும் மேற்பட்ட மக்களும் விசாரிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
மவுண்ட்பேட்டன் ரோட்டில் இருக்கும் காத்தோங் ஈட்டிங் ஹவுஸ் என்ற உணவு, பான நிலையம் அக்டோபர் 15 முதல் 24 வரை 10 நாட்களுக்கு மூடப்பட்டது.
அந்த நிலையம் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோரைப் பரிசோதித்து அனுமதிக்கும் நடைமுறையைப் பின்பற்றவில்லை.
ஒன்பது கடைகளுக்குச் சமரச அபராதம் விதிக்கப்பட்டது.
சர்க்குலர் ரோட்டில் செயல்படும் 'பிங்க் வேல்' என்ற கடை உள்ளிட்ட சில கடைகள் மீண்டும் குற்றம் செய்தன. அந்தக் கடை நவம்பர் 3 வரை 20 நாட்களுக்கு மூடப்பட்டது. விதிமீறி நடந்துகொண்ட கில்லினி ரோட்டில் செயல்படும் கோப்பிதியாம் அக்டோபர் 25 வரை 10 நாட்களுக்கு செயல்படக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
உணவு, பான கடைகளில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை கள் நடத்துவர் என்றும் உறுதியான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.