அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் 11 வயது இரட்டையரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கண்டுஎடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அந்தக் கால்வாய் பகுதியில் காவல்துறை புலனாய்வு அதிகாரி கள் சோதனையிட்டனர். கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே உள்ள அந்தக் கால்வாய்க்கு நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பலனாய்வு அதிகாரிகள் வந்தனர்.
சாதாரண உடை அணிந்திருந்த அவர்கள், அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்வையிட்டனர். அந்தக் கால்வாய்க்குள் இறங்குவதற்கான பாதையைக் கண்டறியும் பணியில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
தாளில் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்த அதிகாரிகளில் ஒருவர், பின்னர் கால்வாய்க்குள் இறங்கினார். கால்வாய் வழியாக உள்ள தடுப்புவேலிக்கும் கான்கிரீட் அடிவாரத்துக்கும் இடையிலான தூரத்தை அளவிட்டதாகத் தெரிகிறது. பின்னர், அங்குள்ள தரைவீடுகளுக்குப் பக்கத்திலுள்ள ஒரு நடைபாதை வழியாக அந்த அதிகாரிகள் சற்று தூரம் நடந்து சென்றனர்.
ஏறக்குறைய 10 நிமிடங்கள் கழித்து அந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.
அந்த இரட்டைச் சகோதரர்களின் உடல்கள் நேற்று முன்தினம் இரவு மண்டாய் தகனச் சாலையில் தகனம் செய்யப்பட்டன.
எஷ்டன் யாப் காய் ஷெர்ன், ஈதன் யாப் ஈ ஷெர்ன் இருவரது உடல்கள் இருந்த சவப்பெட்டிகளைத் தாங்கிய இரு வாகனங்கள் இரவு 7.45 மணியளவில் மண்டாய் தகனச்சாலைக்கு வந்தன. இரவு 8.15 மணிக்கு பௌத்த சமய வழிபாடு நடந்தது. தொடர்ந்து, இரவு 9 மணியளவில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இருவரது உடல்களும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டதாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்த திரு ஃபோங் சுன் சியோங் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக இரட்டையரின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படாததால், நேரம் தாழ்த்தாமல் உடல்களைத் தகனம் செய்துவிடுமாறு அந்த இரட்டையரின் குடும்பத்தாரிடம் திரு ஃபோங் அறிவுறுத்தி இருந்தார்.
இரட்டையர்களுடைய தந்தையான 48 வயது சேவியர் யாப் ஜுங் ஹொவ்ன்ர் மீது நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
யாப்பை ஒருவாரத்திற்கு விசாரணைக் காவலில் வைக்கவும் கூடுதல் விசாரணைக்காக அவரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லவும் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
யாப்பின் வழக்கு ஜனவரி 31ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும்.