போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்துவதற்கான இறுதி முயற்சியும் தோல்வியடைந்தது. நாகேந்திரன் கே. தர்மலிங்கம் எனப்படும் அந்த ஆடவருக்கு இன்று (புதன்கிழமை) மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தண்டிக்கப்பட்ட நாகேந்திரன், எல்லாவிதமான சட்ட அம்சங்களையும் பயன்படுத்தி விட்டார். மரண தண்டனை கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த வேளையில் அதனை எதிர்த்து நாகேந்திரன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிமன்ற நடைமுறையை அப்பட்டமாக மீறியதாக ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கூறியது. தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான அமர்வு, கடந்த மார்ச் 29ஆம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஆகக் கடைசி முயற்சியாக, நேற்று முன்தினம் நாகேந்திரனின் தாயார் திருமதி பாஞ்சாலை சுப்பிரமணியம் ஒரு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அம்
மனுவை மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது. ஆண்ட்ரூ ஃபாங், ஜுடித் பிரகாஷ், பெலிண்டா ஆங் ஆகியோர் அந்த நீதிபதிகள்.
மனு மீதான விசாரணையில் நேற்று பங்கேற்ற திருமதி பாஞ்சாலை, "எனக்கு என் மகன் உயிரோடு வேண்டும்," என்று உரைபெயர்ப்பாளர் மூலம் தமிழில் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். வழக்கறிஞரை அமர்த்தவேண்டி இருப்பதால் சிறிது அவகாசம் தேவை என்று அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இறுதி மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமது குடும்பத்தாருடன் இரண்டு மணி நேரம் செலவிட நாகேந்திரனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.