சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து முடக்கநிலையில் தவித்துக்கொண்டிருப்பதாக பிரிட்டனின் 'ஃபைனான்சியல் டைம்ஸ்' (எஃப்டி) நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக லண்டனில் உள்ள சிங்கப்பூரின் தூதர் அதற்குப் பதிலளித்துள்ளார்.
"உங்களின் நிருபரிடம் கூறியதுபோல, தற்போது தங்களின் தங்குவிடுதியை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டு ஊழியர் எவருக்கும் தடை விதிக்கப்படவில்லை," என்று திரு லிம் துவான் குவான் எழுதிய கடிதம் 'எஃப்டி'யில் நேற்று முன்தினம் வெளியானது.
சமூக இடங்களுக்குச் செல்வதற்கான விண்ணப்பங்களை ஊழியர்கள் சமர்ப்பித்தால் அவற்றுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படுவதாகவும் இம்மாத இறுதியில் மேலும் அதிகமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள் பலரது சுதந்திரம், தொடர்ந்து பலவாறு கட்டுப்படுத்தப்படுவதாக இம்மாதம் 7ஆம் தேதியன்று செய்தி ஒன்றை 'எஃப்டி' வெளியிட்டிருந்தது.
செய்தி அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததற்கு மாறாக, கொள்ளைநோயில் சிக்கியிருந்த காலகட்டத்தில் சிங்கப்பூரர்கள் மீது காட்டிய அதே அக்கறையை வெளிநாட்டு ஊழியர்கள் மீதும் சிங்கப்பூர் அரசாங்கம் காட்டியதாக திரு லிம் தம் பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குடிமக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட அதே காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்ததை திரு லிம் சுட்டினார்.
வரும் 24ஆம் தேதிமுதல் சமூக இடங்களுக்குச் செல்வதற்கு வெளிநாட்டு ஊழியர்கள் விண்ணப்பிக்கத் தேவைப்படாது என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.