உட்லண்ட்சில் நேற்று முன்தினம், இறுதிச் சடங்கு வாகனம் ஒன்றில் தீப்பிடித்தது.
அரண்மனையைப் போன்று அலங்கரிக்கப்பட்ட அந்த வாகனத்தில் சீனப் பாரம்பரிய வடிவிலான கூரையும் அழகிய தொங்கு விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன.
சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில், உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 31ன் புளோக் 313க்கு அருகில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் நடந்தது.
மாது ஒருவரின் இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில் அந்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக ஷின் மின் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
அங்கிருந்த ஆடவர்கள் சிலர், வாளிகளில் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர். இறுதிச் சடங்குக்காகப் பின்னர் வேறு ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் செல்லும் முன்பே தீ அணைக்கப்பட்டடுவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. புளோக் 313ல் வசிக்கும் திருவாட்டி லெட்சுமி, கார் நிறுத்தும்இடத்தில் புகை கிளம்பியதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்ததாகவும் விரைவில் தீ அணைக்கப்பட்டதாகவும் கூறினார்.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.