வாஷிங்டன்: எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமானத்திற்குள் மடிக் கணினியை எடுத்துச்செல்ல முடியாது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமானப் பயணத்தின்போது மடிக்கணினி உள்ளிட்ட மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை 10 விமான நிலையங்களில் இயங்கும் 9 விமானச் சேவைகளைப் பாதிக்கும் என அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
வெளிநாடுகளில் உளவுத் துறையால் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் மின்னனு சாதனங்களான மடிக்கணினி, புகைப்படக் கருவிகள், டிவிடி சாதனம் மற்றும் மின்னனு விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை அடங்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் அலைபேசிகள் ஆகியவற்றை பயணிகள் விமானத்தில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.