அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தனது அமைச்சரவையில் யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசித்து வரும் வேளையில், தற்போதைய அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவை எதிர்த்து நேற்று முன்தினம் வாஷிங்டனில் பெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
சென்ற 3ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தற்போதைய அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இதுதொடர்பாக மறு வாக்கு எண்ணிக்கை கோரியும் பல்வேறு மாநிலங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் இக்கூற்றை எதிரொலிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே திரண்டு அவருக்கு ஆதரவாக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
அமெரிக்க கொடிகளை உயர்த்திப் பிடித்தும் அதிபராக டிரம்ப் வர வேண்டும் என்ற வாசகங்களைத் தூக்கிப்பிடித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது கோல்ஃப் மைதானத்திற்கு செல்வதற்காக கூட்டத்தினரைக் கடந்து சென்ற டிரம்ப் ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து கையசைத்தார்.
பொதுவாக அமைதியாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இரவு நேரத்தின்போது டிரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்தது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ஒருவர் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
‘மோசடி தேர்தல்’ என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது அதிபர் நிர்வாகத்தின் சுமூகமான மாற்றத்திற்குத் தடையாக இருக்கும் நிலையில், மாநிலங்கள் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, நேற்று காலை நிலவரப்படி பைடன் 306 இடங்களையும் டிரம்ப் 232 இடங்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜார்ஜியாவில் பைடனும் டிரம்ப் வடக்கு கரோலினாவிலும் வெற்றி பெற்றுள்ளனர்.