பிரேசிலியா: பிரேசிலில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 4,000 பேர் வரை கிருமித் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.
ஆனால் கொவிட்-19க்கு எதிராக நாட்டை முடக்க அதிபர் ஜயர் பொல்சனாரோ தயக்கம் காட்டி வருகிறார். நாடு முழுவதும் உருமாறிய கிருமித்தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது.
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் மடிந்து வருகின்றனர்.
இதனால் தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. இதுவரை தொற்றுக்கு 337,000 பேர் மாண்டுவிட்டனர்.
உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசிலில்தான் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
"நாட்டை முடக்கினால் பொருளியல் பாதிக்கப்பட்டு நிலைமை மேலும் மோசமாகும்," என்று அதிபர் ஜயர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே உள்ளூர் அதிகாரிகள் பிறப்பித்த கட்டுப்பாடுகளை நீதிமன்றத்தின் மூலம் அகற்ற அவர் போராடி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை அன்று அதிபர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜயர், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அவர் குறைகூறினார்.
ஒரே நாளில் 4,000 பேர் தொற்றுக்குப் பலியானது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
இதுவரை 13 மில்லியன் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மட்டும் கொவிட்-19க்கு 66,570 பேர் இறந்து விட்டனர். இது, முந்தைய மாதத்து டன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகம்.