மணிலா: குறைந்தது 12 வயது சிறுவர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி போட பிலிப்பீன்ஸ் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மிக வேகமாகப் பரவக்கூடிய கொவிட்-19 டெல்டா கிருமி வகையுடன் பிலிப்பீன்ஸ் போராடி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தவில்லை என்று கூறி பல அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ள வேளையில், இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி ஏழு மாதங்கள் ஆன பிறகும் பெரியவர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். இதற்கிடையே, பிலிப்பீன்ஸில் அன்றாட பாதிப்பு பெரும்பாலான நாட்களில் 20,000க்கும் மேல் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
சிறுவர்களுக்குத் தடுப்பூசி போட்டால்தான் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியும் என்று பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முதற்கட்ட நடவடிக்கையாக 120 தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றைத் திறக்க பிலிப்பீன்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பான விவரங்களை அது வெளியிடவில்லை.
அடுத்த மாதத்திலிருந்து சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று பிலிப்பீன்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.