சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணிகள் மோதும் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளில் இந்திய அணி பந்தடித்தது. இந்தியா 358 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரித்விஷா (66 ஓட்டங்கள்), அணித் தலைவர் விராத் கோஹ்லி (64 ஓட்டங்கள்), ரகானே (56 ஓட்டங்கள்), புஜாரா (54 ஓட்டங்கள்), விஹாரி (53 ஓட்டங்கள்) ஆகிய 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர். ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை விளை யாடிய ஆஸ்திரேலிய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ஓட்டங்கள் எடுத்து பதிலடி கொடுத்தது. நேற்று நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பந்தடித்த ஆஸ்திரேலிய அணி 544 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நில்சென் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 170 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களை எடுத்தார்.