அணுப்பெருக்கத்தின் வேகத்தைவிட அதிவேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் தொழில்நுட்பத்தால் ஏராளமான பலன்களை அனுபவித்தாலும் பாதிப்புகளையும் எதிர் கொள்ளவே வேண்டியுள்ளது.
அந்த வகையில் உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கி, தகவல் பரிமாற்றத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் இந்த நூற்றாண்டின் அரும்பெரும் கண்டுபிடிப்பான இணையம், எத்தனையோ வசதிகளை ஏற்படுத்தி வந்தாலும் ஆபத்துகளையும் கொண்டு வந்துள்ளது.
உலக மக்கள் அனைவரையும் கணினிக்குள் இணைக் கும் இணையத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் விஷக் கிருமிகளும் உட்புகுந்து விடுகின்றன.
இதனால் அரசாங்கப் பணியாளர்களின் இணையப் பயன்பாட்டில் கட்டுப்பாடு கொண்டுவரப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 100,000 அரசாங்க ஊழியர்கள் இணையத்துக்கு தனி கணினியையும் அலுவலக மின்னஞ்சல், பணிகளுக்கு மற்றொரு கணினியையும் பயன்படுத்துவார்கள். எனினும், ஆசிரியர்களின் கணினிகளில் இணைய சேவை இருக்கும்.
வெளியுறவு அமைச்சு, தற்காப்பு அமைச்சு ஆகியவை ஏற்கெனவே இந்த முறையில்தான் செயல்படுகின்றன என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், தாம் முதலில் இதனைச் செயல்படுத்திப் பார்த்த பின்னரே அனைத்து அரசு சேவைகளிலும் இதனை நடைமுறைப்படுத்தும் முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.
அச்சுறுத்தல்கள் கடுமையானவையாகவும் நவீன மானவையும் ஆகிவரும் வேளையிலும் அரசாங்கம் கணினி கட்டமைப்புகளை அதிகமாக சார்ந்திருக்கும் நிலையிலும் புதிய எச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அதனால், அரசாங்கத்தின் முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசு ஊழியர்களின் பணி கணினிகளில் இணைய இணைப்பைத் துண்டிப்பது மிகவும் அவசியம் என்று கூறிய பிரதமர் லீ சியன் லூங், மிகவும் நூதனமான, திடமான இணைய தாக்குதல்களை சிங்கப்பூர் சந்தித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 16 இணைய தாக்குதல்களை இணையப் பாதுகாப்பு முகவை சந்தித்துள்ளது. 2014ல் வெளியுறவு அமைச்சின் தகவல்தொழில் நுட்பக் கட்டமைப்பு ஊடுருவப்பட்டது. விவேக தேசமாக உருவெடுத்து வரும் சிங்கப்பூர் தகவல்தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பெரிதும் சார்ந்துள்ளது. நாட்டின் எல்லாத் தகவல்களும் மக்களின் வருமான, நிதி விவரங்கள் முதல் மருத்துவக் குறிப்புகள் வரை அனைத்து விவரங்களும் இந்தக் கட்டமைப்பு களுக்குள் சேமிக்கப்பட்டுள்ளன. சாதாரண குறும்புச் செயல்காரர்களில் இருந்து பயங்கரவாதிகள் வரையில் நாட்டையோ, மக்களையோ சீரழிக் கவோ அல்லது தங்களது சித்தாந்தங்களைப் பரப்பவோ தற்போது இணையத்தையே பேராயுதமாகக் கொண்டு உள்ளனர். இந்நிலையில், விவேக நாட்டுக்கு இணையப் பாதுகாப்பு என்பது அத்தியாவசியமானது. அதிலும் தகவல் தொழில் நுட்பக் கட்டமைப்பைப் பெரிதும் சார்ந்திருக்கும் சிங்கப்பூரில், நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களதும் அரசாங்கத்தினதும் தகவல்களின் பாதுகாப்புக்கும் தகவல்தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
அரசு ஊழியர்களின் இணையப் பயன்பாட்டு மாற்றங்களினால் மத்திய சேமநிதி சேவை, வருமான வரிச் சேவை, கடவுச் சீட்டு சேவை போன்ற எந்தவொரு அரசாங்க இணைய சேவையும் பாதிக்கப்படாது. இந்தச் சேவைகள் உயர்தர பாதுகாப்புள்ளவை. இதில் மக்களும் பணியாளர்களும் அந்தந்தக் கட்டமைப்புக்குள் மட்டுமே செயல்படுவர். ஊடுருவல்கள் தடுக்கப்படும்.
புதிய முறையினால் சில அசௌகரியங்கள் ஏற்படவே செய்யும். அரசு பணியாளர்கள் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். பணிகளில் தாமதம் ஏற்படலாம். எனினும் அரசு பணியாளர்களும் மக்களும் இதற்குத் தங்களைப் பழகிக்கொள்ள வேண்டும். எனினும், மாற்றங்களை எளிதில் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்களை மாற்றிகொண்டு வந்துள்ள சிங்கப்பூரர்களுக்கு இது பெரிய சவால் அல்ல. மிக விரைவில் புதிய செயல்முறை இயல்பான ஒன்றாகவிடும்.