சல்மா காலிக், மூத்த சுகாதார செய்தியாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உடல்நிலை சரியில்லை என்றால் அதோடு வெளியே செல்வது உங்கள் நண்பர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். தொற்றுநோய் அதிகரித்தால் அதிகம் பேர் மாண்டுவிடுவார்கள்.
கொவிட்-19 கொள்ளைநோயாக உலகச் சுகாதார நிறுவனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. 145,798க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை 5,531ஐக் கடந்துவிட்டது.
கொரோனா எல்லை கடந்து பரவுகிறது. சிங்கப்பூர் எவ்வளவு காலத்திற்கு கொரோனா மரணங்களைத் தடுத்து தாக்குப் பிடித்து நிற்கும் என்பது தெரியாமல் சிங்கப்பூரர்கள் கவலைகொண்டு இருக்கிறார்கள்.
கொரோனா கிருமி சிங்கப்பூரில் 200 பேரைத் தொற்றி இருக்கிறது. 97 பேர் குணமடைந்துவிட்டார்கள் என்றாலும் 11 பேர் இன்னமும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
யாரும் இதுவரையில் மரணம் அடையவில்லை என்றாலும் மரணம் நெருங்கி வரக்கூடிய ஆபத்து இருப்பதாக சுகாதாரத் துறையினர் அபாயச் சங்கு ஊதி வருகிறார்கள்.
கொரோனா சிங்கப்பூரில் மேலும் மரணங்களை ஏற்படுத்திவிடுமா என்பதுதான் அடுத்த கேள்வி.
சிங்கப்பூரில் கவலை தரக்கூடிய நிலையில் இருப்போரின் எண்ணிக்கையைப் பொறுத்தே மரணங்கள் இருக்கும். அவர்களை உயிரோடு மீட்பதற்குப் போதிய மருத்துவ சாதனங்கள், வளங்கள் இருப்பதும் இதில் முக்கியம்.
ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்களும் ஒட்டுமொத்தமாக நல்ல பலன்களை ஏற்படுத்த முடியும் என்பதால் நாம் ஒவ்வொருவரும் குறிப்பிடத்தக்க நல்ல, விரும்பிய பலன்களைச் சாதிக்க முடியும்.
தலைசிறந்த சிகிச்சைகளை அளித்தாலும்கூட கொரோனா கிருமிகள் ஒருவரைக் கொன்றுவிடும் ஆற்றல் கொண்டவை. இருந்தாலும் உலகளவில் ஏற்பட்டு உள்ள மரணங்களைப் பார்க்கையில், மருத்துவச் சாதனங்கள் போதிய அளவுக்கு இல்லாததும் கொரோனா மரணங்களுக்கு ஒரு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
கடுமையான நோயாளிகளைப் பொறுத்தவரையில், இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாக்கி சளிக்காய்ச்சலை ஏற்படுத்திவிடும்.
கொரோனாவுக்கு இப்போது மருந்து இல்லை. அந்தக் கிருமியின் பிடியில் இருந்து உடல் மீண்டு வரும்வரை மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்.
கடுமையான சளிக்காய்ச்சலுக்கு ஆளாகி இருப்பவர்களுக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தீவிர கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு பிராணவாயுவைக் கொடுக்க செயற்கை சுவாசச் சாதன வசதியும் அவசியமாகிறது.
சிங்கப்பூரில் இப்போது 11 பேர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை, ஒப்பிட்டுப் பார்க்கையில் அவ்வளவு அதிகம் அல்ல. ஆனால் தொற்றுநோய் அதிகரித்தால் கவலை அதிகமாகிவிடும்.
மிகவும் மோசமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு உள்ள ஆற்றல், அதன் வழக்கமான பயன்பாட்டைப் பொறுத்தே இருக்கும்.
திடீரென்று மிக அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் எல்லா நோயாளிகளுக்குமே தேவைப்படும் அளவிற்குத் தேவைப்படும் சிகிச்சையை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடலாம்.
கொரோனா தொடங்கிய முதல் சில வாரங்களில் சீனாவில் மரண விகிதம் சுமார் 4 விழுக்காடாக இருந்தது. மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகள் போதிய அளவுக்கு இல்லாததே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இத்தாலியில் கிருமி தொற்றியோரில் சுமார் 5 விழுக்காட்டினர் மாண்டுவிட்டனர். இத்தாலியில் மாண்டவர்களில் பலரும் முதியவர்கள். இதைத்தான் லண்டன் துப்புரவு மற்றும் வெப்ப மண்டல மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ஹேமன், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் சுட்டிக்காட்டினார்.
மரண விகிதம் என்பது ஒரு நோயாளியின் வயது, அவருக்கு இருக்கக்கூடிய வேறு நோய்கள், சிகிச்சை வசதிகள் ஆகியவற்றைப் பொருத்ததாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இப்போதைய நிலவரத்தைப் பார்க்கையில், கொரோனா தொற்றியவர்களில் சுமார் 80 விழுக்காட்டினருக்குப் பாதிப்பு மேலோட்டமாகத்தான் இருக்கிறது.
இதர 20 விழுக்காட்டினரை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் செயற்கை சுவாசம் தேவைப்படாது என்று நம்புவோமாக.
சிங்கப்பூரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்போரில் பாதி பேருக்கும் மேலாக தீவிர கண்காணிப்புத் தேவைப்படுகிறது. அனைவருக்கும் அல்லது பெரும்பாலானவர்களுக்கு ஏதோ ஒரு நேரத்தில் செயற்கை சுவாசச் சாதனங்கள் தேவைப்படும்.
கிருமி பாதித்த 10 பேரில் ஒருவருக்கு மட்டும் தீவிர கண்காணிப்பு தேவைப்படும் பட்சத்தில்கூட அதைச் சுகாதாரப் பராமரிப்பு வளங்கள் சமாளித்துவிடுமா என்பது சந்தேகம்தான்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் அனுகூலமான இரண்டு அம்சங்களைக் குறிப்பிடலாம். ஜனவரி மாதம் கொரோனா முதன்முதலாக தலைகாட்டியபோது அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை சிங்கப்பூரின் பொது மருத்துவமனைகள் குறைத்துக்கொண்டன. இதனால் தீவிர கண்காணிப்பு படுக்கைகள் காலியாயின.
சென்ற ஆண்டு 330 படுக்கைகளைக் கொண்ட தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் திறக்கப்பட்டது. அதில் தொற்று நோய்களுக்காகவே 124 தனி அறைகள் உள்ளன. கொரோனா கைவரிசைக் காட்டியபோது அவற்றில் சுமார் பாதி வார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.
கொவிட்-19 பாதிப்பு அதிகமானால் அதைச் சமாளிக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு வார்டுகளும் மருத்துவமனை படுக்கைகளும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று பிரதமர் உறுதி கூறி இருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கையில், ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானது. இப்படி நடந்துகொள்ளும் போதுதான் பல உயிர்களையும் காக்கமுடியும்.
தொற்றுநோயால் பாதிக்கப்படுவோர் குறைந்தால் தீவிர கண்காணிப்பு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும்.
நோய் பரவலைத் தாமதப்படுத்துவது மிக முக்கியமானது என்று பேராசிரியர் ஹேமன் குறிப்பிட்டு இருக்கிறார். இதைத்தான் சிங்கப்பூர் கடந்த இரண்டு மாதமாகச் செய்து வருகிறது.
இருந்தாலும் தனிப்பட்டவர்கள் சிலர் பொறுப்புடன் நடந்துகொள்வதாகத் தெரியவில்லை. கடந்த காலத்தைப் போலவே நாம் இப்போதும் இருந்துவிட முடியாது. உங்களுக்கு கொரோனா தொற்றி இருக்கிறதா, இல்லையா என்பது பிரச்சினை இல்லை. உடல்நிலை சரியில்லை என்றால் வெளியே சென்று பலரோடும் கலந்துறவாட வேண்டாம்.
ஆபத்தில் இறங்காதீர்கள். உங்கள் மூலம் யாருக்காவது கிருமிகள் பரவிவிட்டால் அது பலருக்கும் பரவி, தேவைப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.
இன்றைய சூழ்நிலையில், யாரையும் கிருமித்தொற்றும் அளவுக்கு விட்டு விடுவது சமூக விரோதக் காரியமாகவே இருக்கும். உடல்நிலை சரியில்லை என்றால் வேலைக்குப் போவதும் வில்லன் செய்யும் காரியம் போலத்தான் இருக்குமே தவிர கதாநாயகன் செய்யும் வேலையாக இருக்காது.