சினிமாவில் கால்பதித்தபோது இந்தத் துறையின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை தாம் உணரவில்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்பவர், ஒருசில மாதங்கள் தீவிர முனைப்புக் காட்டாமல் ஜாலியாக நடித்து வந்ததாகச் சொல்கிறார்.
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தபோதுதான் நல்ல அனுபவமும் சினிமாவைப் பற்றிய தெளிவும் கிடைத்ததாம்.
“சத்யராஜ், பாரதிராஜா உட்பட பல மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு அது. இந்த வயதிலும் சத்யராஜ் சாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால், அதற்கு அவரது திறமையும் ஈடுபாடும்தான் காரணம்.
“படப்பிடிப்பின்போது காட்சிகளையும் தங்கள் நடிப்பையும் மெருகேற்ற இவரைப் போன்ற அனுபவக் கலைஞர்கள் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை நேரில் கண்டபிறகு நாமும் எந்தளவுக்குப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
“சினிமா நிபுணத்துவம் என்றால் என்ன என்பது பாண்டிராஜ் சார் இயக்கத்தில் நடித்தபோது தெரியவந்தது. பல கோடிகள் செலவழித்து எடுக்கப்படும் படத்தில் நமக்கான நிமிடங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காரணம், அந்தக் காட்சிக்காகவும் பல லட்சங்கள் செலவாகிறது,” என்று பொறுப்புடன் பேசுபவர், கடந்த ஓராண்டுகாலமாக மிகுந்த கவனத்துடன் நடைபோட்டு வருவதாகச் சொல்கிறார்.
பிரியாவின் காதல் விவகாரம் குறித்து அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகிறது.
இதுகுறித்துக் கேட்டால் மறைப்பதற்கோ, கூடுதலாகப் பேசுவதற்கோ ஏதுமில்லை என்ற பதிலே வருகிறது.
“என் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு தலைமையேற்றிருப்பவருக்குத் தெரியும் (சிரிக்கிறார்). பிறகு இதில் சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது. சில விஷயங்கள் தொடர்பாக நான் அதிகம் அலட்டிக் கொள்வது இல்லை.”
‘மாஃபியா’ குறித்து?
“நான் என் நடிப்புத் திறமையைவிட இயக்குநர்களை அதிகமாக நம்புகிறேன். ஏனெனில் நம் நடிப்பு சரியாக இருக்கிறதா என்பதை அவர்கள் உடனுக்குடன் சொல்லிவிட முடியும்.
“‘மாஃபியா’வில் இதே நடைமுறையைத் தான் நான் பின்பற்றினேன். படத்தின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது எனில், ரசிகர்கள் என்னை இந்தக் கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொண்டுவிட்டனர் என்பது கூடுதல் உற்சாகம் தருகிறது,” என்கிறார் பிரியா பவானி சங்கர்.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என்று சக நாயகிகள் போலவே பேசினாலும், உண்மையில் இந்தக் கொள்கையைத் தீவிரமாக கடைப்பிடிக்கப் போவதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார்.
பிற மொழிகளை விட தமிழுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன் என்றும் கூறி வருகிறார் பிரியா பவானி சங்கர்.