ரசிகர்கள் தமக்கு வைத்துள்ள செல்லப் பெயர் எக்குத்தப்பாக இருந்தாலும் அதைத் தாம் வெகுவாக ரசிப்பதாகச் சொல்கிறார் நடிகை ரித்திகாசிங்.
‘இறுதிச்சுற்று’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் அண்மையில் ‘ஓ மை கடவுளே’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரை ‘நூடுல்ஸ் மண்ட’ என சக கதாபத்திரங்கள் குறிப்பிடுவார்கள்.
அப்படத்தின் வெற்றியால் இளம் ரசிகர்கள் மத்தியில் ‘நூடுல்ஸ் மண்ட’ என்ற பெயரும் பிரபலமாகி விட்டது. இதனால் எங்கு சென்றாலும் சமூக வலைத்தளங்களிலும் ரித்திகாவை ‘நூடுல்ஸ் மண்ட’ என்றே ரசிகர்கள் செல்லமாகக் குறிப்பிடுகின்றனர்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ரசிகர்களின் அன்பு தம்மை நெகிழ வைத்திருப்பதாகவும் அவர்கள் இவ்வாறு அழைப்பதையே தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அருண் விஜய்யின் ‘பாக்ஸர்’, அரவிந்த்சாமியின் ‘வணங்காமுடி’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துவரும் ரித்திகா தெலுங்கிலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.
“தமிழ் ரசிகர்கள் குறித்து நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். திறமையை எடைபோட்டு அனைத்து கலைஞர்களையும் கைதூக்கி விடுபவர்கள்.
“எனவே எனக்குள்ள செல்லப் பெயரை என் மீதான ரசிகர்களின் வெளிப்பாடு என்றுதான் கருத வேண்டும்,” என்கிறார் ரித்திகா சிங்.