சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாகிறது ‘முந்தானை முடிச்சு’. இதில் சசிகுமார் நாயகனாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் இணைந்துள்ளனர். படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். கடந்த 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது ‘முந்தானை முடிச்சு’.
ஏவி.எம். நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஊர்வசி, தீபா, பசி சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
வசூல், விமர்சன ரீதியில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் மறுபதிப்பிற்கும் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார் பாக்யராஜ். சசிகுமார் நாயகனாக நடிப்பது முன்பே உறுதியாகிவிட்ட நிலையில் நாயகியைத் தேர்ந்தெடுக்க நீண்ட ஆலோசனை நடைபெற்றது. அதன் முடிவில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதர நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிடத் திட்டமாம்.
முன்னதாக அண்மைய பேட்டி ஒன்றில் இப்படத்தை இயக்குவதற்கு நல்ல இயக்குநரைத் தேடிக்கொண்டிருப்பதாக சசிகுமார் தெரிவித்திருந்தார்.
“சிறு வயது முதலே நான் பாக்யராஜின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். ‘முந்தானை முடிச்சு’ தவிர அவர் இயக்கத்தில் வெளிவந்த மேலும் 2 படங்கள் எப்போதுமே என் மனதில் இடம்பிடித்திருக்கும்.
“அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்கவேண்டும் என விரும்பினேன். அதற்காக நான் மேற்கொண்ட முயற்சியின் பலனாக ஏற்கெனவே ஒரு படத்தை மறுபதிப்பு செய்ய இருந்தோம்.
“ஆனால், அது சாத்தியமாகவில்லை. நல்லவேளையாக இப்போது நானும் தயாரிப்பாளர் சதீஷும் அவரை நேரில் சந்தித்துப் பேசி ‘முந்தானை முடிச்சு’ மறு பதிப்புக்கு அனுமதி பெற்றிருக்கிறோம்.
“எங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியதுமே அவரும் உற்சாகமாக சம்மதித்தார். எனினும் அவர் படத்தை இயக்கவில்லை. நானும் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதால் இயக்குநர் பொறுப்பை ஏற்கமுடியவில்லை,” என்கிறார் சசிகுமார்.
இன்றைய இளம் ரசிகர்களுக்கு ‘முந்தானை முடிச்சு’ படம் குறித்து அதிகம் தெரிந்திருக்காது என்று குறிப்பிடுபவர், ஒருவேளை முதல் பாகத்தைப் பார்த்திருந்தாலும் இப்பொழுது உருவாக உள்ள மறுபதிப்பும் அதே சுவாரசியத்துடன் இருக்கும் என உத்தரவாதம் அளிக்கிறார்.
“மறுபதிப்பிலும் முருங்கைக்காய் சமாசாரம் இருக்கும். சுவை குறையாமல் பல காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம். கூடிய விரைவில் படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் சசிகுமார்.