நடிகர் விஜய் மீண்டும் தன் பெற்றோருடன் இணைந்துவிட்டார்.
அவரது ரசிகர்கள் இந்த தகவலைத்தான் இப்போது உற்சாகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
விஜய் தன் தாயார் ஷோபாவுடன் காணப்படும் அண்மைய புகைப்படம்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, திடீரென விஜய் பெயரில் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதிலும் விஜய் பெயரில் அந்தக் கட்சி தொடங்கப்பட்டது.
இதுகுறித்து அவரைக் கலந்தாலோசிக்காமலேயே எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவிப்பை வெளியிட, குடும்பத்தில் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
தமக்கும் அந்த அரசியல் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என அறிவித்தார் விஜய். அதன் பிறகு கடந்த சில மாதங்களாக அவர் தன் தந்தையை சந்திப்பதில்லை, அறவே பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது.
"இது தந்தைக்கும் மகனுக்குமான சிறிய கருத்து வேறுபாடு. விரைவில் எல்லாம் சரியாகும்," என்றார் எஸ்.ஏ.சி.
இந்நிலையில், அண்மையில் தன் மகனை சந்தித்துப் பேசியுள்ளார் விஜய்யின் தாய் ஷோபா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
இதைக்கண்டு உற்சாகம் அடைந்த ரசிகர்கள், விரைவில் தன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய் காட்சியளிக்கும் புகைப்படமும் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.