விஜய்யின் 66ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிக்கிறார் என்பதும் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குவதும் உறுதியாகிவிட்டது. இந்தப் படத்துக்காக விஜய் வாங்கப்போகும் சம்பளம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது.
தயாரிப்புத் தரப்பு அவரிடம் பேசியுள்ள தொகை ரூ.118 கோடி எனக் கூறப்படுகிறது.
'தளபதி - 66' என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கான பணிகள் இன்னும் அதிகாரபூர்வமாக தொடங்கவில்லை. அதற்குள் பல ஓடிடி தளங்கள் படத்தின் மின்னிலக்க விநியோக உரிமையைப் பெறுவதில் போட்டிபோட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்னணி ஓடிடி நிறுவனம் இப்படம் சார்ந்த பல்வேறு உரிமங்களைப் பெற பெருந்தொகை கொடுப்பதாகக் கூறி தில்ராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி மொத்தமாக ரூ.200 கோடியை அள்ளிக்கொடுக்கத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளதாம். இதைக்கேட்ட தயாரிப்புத் தரப்புக்கே மலைப்பாகிவிட்டது. இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
எனினும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து ஓடிடி தளங்களில் வெளியிடும் பட்சத்தில் முதலீடு செய்ததை திரும்பப் பெற்றுவிடலாம் என அந்நிறுவனம் கணக்கிட்டிருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
"இந்தப் படத்துக்காக விஜய்க்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம் ரூ.118 கோடி. மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப வல்லுநர்கள், படப்பிடிப்புக்கான செலவு என அனைத்தையும் 200 கோடி ரூபாயில் ஈடுகட்டிவிடலாம். அதன் பின்னர் திரையரங்க உரிமம், வெளிநாட்டு உரிமம் என திரளும் பலகோடி ரூபாய் தயாரிப்புத் தரப்புக்கு லாபமாக அமையும்.
"எனினும் ஓடிடி நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்னும் முழுமை பெறவில்லை. அநேகமாக நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் முடிவடைந்த கையோடு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்," என்கிறார் மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணன்.
மேலும், இந்தப் படம் அண்மைய சில ஆண்டுகளில் வெளிவந்த விஜய் படங்கள் போல் அல்லாமல், மென்மையான குடும்பக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக இயக்குநர் வம்சி கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' ஆகிய படங்களைப் போல் மென்மையான காதலும் இந்தக் கதையில் இருக்க வேண்டும் என விஜய் விரும்புவதாகத் தகவல்.
இதையடுத்து விஜய்க்கு ஏற்ப கதையை உருவாக்கியதும் அவரிடம் அதை விரிவாகக் கூறியுள்ளார் இயக்குநர் வம்சி. அதைக் கேட்ட விஜய் அசந்து போனாராம்.
"கடந்த இருபது ஆண்டுகளில் இப்படிப்பட்ட ஒரு கதையை நான் கேட்டதில்லை.
"எந்தவித குறையும் இல்லாமல் மிக நேர்த்தியாகவும் அருமையாகவும் இருக்கிறது," என்று இயக்குநரிடம் மட்டுமல்லாமல் தனது நட்பு வட்டத்திலும் இவ்வாறு கூறியுள்ளார் விஜய். 'தளபதி - 66' படத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியிட வேண்டும் என விரும்புகிறார் தயாரிப்பாளர்.
ஆனால் இயக்குநர் சங்கரின் புதுப்படமும் தீபாவளியைக் குறிவைத்து தயாராகி வருகிறது. ஒருவேளை சங்கர் படம் வெளிவரும் என்றால், தன் படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் வெளியீடாக களமிறக்கலாம் என்று கூறிவிட்டாராம் விஜய். தயாரிப்புத் தரப்பும் இதை ஏற்றுக்கொண்டதாகத் தகவல். இதற்கிடையே, 'தளபதி 66' படத்துக்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள தமன் இசையமைப் பார் என்று கூறப்படுகிறது. நாயகியாக ராஷ்மிகா நடிக்க வாய்ப்புள்ளதாம்.
, :
விஜய்