'மெட்டி ஒலி' தொலைக்காட்சித் தொடரில் கொடுமைப்படுத்தும் மாமியாராக வந்து நேயர்களின் கோபத்துக்கு ஆளானவர் சாந்தி வில்லியம்ஸ்.
அதன் பிறகு பல தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இன்னும்கூட கொடுமைக்கார மாமியாராகவே ரசிகர்கள் தன்னைப் பார்ப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார். தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித்தொட ரில் நடித்து வரும் சாந்தி வில்லியம்ஸ், தன் வாழ்க்கை சோகமும் சவால்களும் நிறைந்தது என்கிறார்.
"இன்று ஓரளவு வசதியாக இருக்கிறோம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த வீட்டை விற்று, அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாமல் நடுத்தெருவில் நின்றோம். ஆடம்பர வாழ்க்கைக்குப் பிறகு சீட்டுக்கட்டுப்போல் எல்லாம் சரிந்துபோனது. குடும்பப்பாரத்தை தனியாளாக மீட்டெடுக்க பாடுபட்டேன்," என கடந்த காலத்தை நினைவுகூர்கிறார் சாந்தி.
இவரது கணவர் அந்நாள்களில் மிகப் பிரபலமான ஒளிப்பதிவாளர். ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.
"நான் கேரளாவில் பிறந்தவள் என்றாலும் வளர்ந்து ஆளானது எல்லாம் சென்னையில்தான். என் அக்காவுக்கு சினிமா நடிகையாக வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்குத்தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது. 12 வயதானபோது குறும்படம் ஒன்றில் நடித்தேன். அதன்பிறகு எடுத்த எடுப்பிலேயே மலையாளப் படத்தில் கதாநாயகி யாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அடுத்த சில ஆண்டுகளில் பல படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.
"ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸுடன் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரது தோற்றத்தை வைத்து சாதாரணமாக எடைபோட்டுவிட்டேன். பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய ஒளிப்பதிவாளர் என்பது தெரியவந்தது. திடீரென ஒருநாள் என்னிடம் அவர் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியபோது நான் மறுத்துவிட்டேன். அவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நேரம் அது. எனது பதிலால் மனமுடைந்து போனவர், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற தாகக் கேள்விப்பட்டேன்.
"அதன் பிறகு எப்படியோ அவர் மீது ஒருவித பரிதாபம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது எனில் எனக்கு இருபது வயதுதான் ஆகியிருந்தது. கிட்டத்தட்ட என் அப்பாவின் வயது. எனினும் அவரது அன்பைப் புரிந்துகொண்டு திருமணத்துக்குச் சம்மதித்தேன்.
"என் கணவர் நிறைய சம்பாதித்தார். விதவிதமான கார்களாக வாங்கிக் குவித்தார். காருக்கு செலவு செய்தே சொத்தை இழந்தார் என்றுகூட சொல்லலாம்.
"1992ஆம் ஆண்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்த வீட்டை விற்றுதான் அவரது மருத்துவச் செலவுகளைச் சமாளித்தோம். வீட்டை இழந்து, சேமிப்பு கரைந்து குடும்பத்துடன் நடுத்தெருவில் நின்றேன். நாங்கள் விற்ற அந்த வீட்டின் விலை இன்று நூறு கோடி ரூபாய் இருக்கும். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதற்கு நாங்கள்தான் சரியான உதாரணம்.
"முன்பு மோகன்லால், மம்மூட்டி, ரஜினி என்று பலர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார்கள். ஆனால் கணவர் நோய்வாய்ப்பட்ட பிறகு யாரும் வரவில்லை. கணவரின் நண்பர் என்பதால் ரஜினி மட்டும் சில உதவிகள் செய்தார்," என்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.
, :