கொரோனா கிருமியால் உயிரிழந்த தந்தைக்கு மகள் பிரியாவிடை
மணிப்பூரின் கொரோனா தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 22 வயது அஞ்சலி ஹ்மங்டே, அந்நோயால் இறந்த தமது தந்தைக்கு பிரியாவிடை கொடுக்க மூன்று நிமிடங்களே கொடுக்கப்பட்டிருந்தன.
கொரோனா தொற்றியிருப்பதாகச் சந்தேகப்படும் அந்தப் பெண், தமது தந்தையின் சவப்பெட்டிக்கு முன் தேம்பித் தேம்பி அழுவதைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. முழு பாதுகாப்பு அங்கியை அணிந்திருந்த அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூற அவள் தாயாரும் உறவினர்களும் நெருங்க முடியவில்லை. தங்களது கைக்கடிகாரத்தைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் மூன்று நிமிடங்கள் கழித்து அந்தப் பெண்ணை உடனே அங்கிருந்து தனிமைப்படுத்தும் நிலைத்திற்குத் திரும்ப அழைத்துச் சென்றனர்.
சென்னையிலிருந்து மணிப்பூருக்குத் திரும்பிய பிற மாநில குடியேறிகளுக்கான சிறப்பு ரயில் சேவையில் பயணம் செய்திருந்தார் அந்தப் பெண். அதே சேவையில் பயணம் செய்த மற்றொருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார்.