சிறு பிள்ளையாக இருந்தபோது யானைகள் மேல் கொண்ட விருப்பம் ஒரு தனிப்பட்ட கலாசாரத்தின் மீது அசைக்க முடியாத ஈர்ப்பை தம் மகனுக்கு உருவாக்கும் என்பதை வாலீத் பகீர் இட்ஹாம் காலிட்டின் தாயார் எதிர்பார்க்கவில்லை. ஐந்து வயதில் வாலீத்துக்கு யானைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. சிறு வயதில் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட யானை பொம்மையை பள்ளி நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வாலீத் இப்போதும் அருகில் வைத்துக் கொள்கிறார். வாலீத் மலாய் இனத்தைச் சேர்ந்தவர். வாலீத்தின் விருப்பப் படி அவரது தாயார் திருவாட்டி அரினா மின்ஹாட், 40, வாலீத்தை அடிக்கடி விலங்கியல் தோட்டத்துக்கு அழைத்துச் செல்வதுண்டு. யானைகளைக் கவனிக்கும் பாகர்கள் பெரும்பாலும் இந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்த வாலீத், யானைகளின் மீது உள்ள ஆர்வத்தினால் இந்திய கலாசாரத்தைப் பற்றி இணையத்தளத்தில் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார்.
இந்திய கலாசாரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே, இந்திய பாணி உடைகள் அணிவது, தோசை, பூரி போன்ற இந்திய உணவுகளை விரும்பி உண்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ராஜஸ்தானில் நடைபெறும் யானைத் திருவிழாவிற்குச் சென்று யானைகளுடன் நெருங்கிப் பழக விரும்பும் வாலீத், ஆபத்திலிருந்து யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் யானைப் பாகனாகவும் விருப்பம் கொண்டுள்ளார்.
பாரம்பரிய இந்திய ஆடைகள் விரும்பி அணிந்து வரும் வாலீத், 15, தங்க நிறம் கலந்த ஷெர்வாணி, வேட்டி போன்றவற்றை அணியும்போது, அரசனைப்போல உணர்வதாகக் கூறினார். படம்: அரினா மின்ஹாட்