'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கான திட்டம் ஒன்றுடன் அந்நிறுவனமும் அதற்குப் பிரதானமாகக் கடனளிக்கும் இந்தியாவின் அரசு வங்கியும் ஜனவரி மாதம் விமானக் குத்தகையாளர்களைச் சந்தித்தனர்.
ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
திட்டம் குறித்த விவரங்களை வங்கி அளிக்கத் தவறியதால் குத்தகையாளர்கள் அதிருப்தி அடைந்ததாக 'பிஸ்னஸ் இன்சைடர்' தெரிவித்துள்ளது.
மேலும் ஜெர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபுச் சிற்றரசு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானக் குத்தகையாளர்களுடனான சந்திப்பின்போது, ஜெட் நிறுவனத்தை நிறுவிய நரேஷ் கோயல் விரக்தியடைந்து மேசையை அறைந்ததால் குத்தகையாளர்கள் சிலர் ஆத்திரமடைந்து தங்கள் விமானங்களை 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்திடமிருந்து மீட்டுக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
சிங்கப்பூருடனான தனது விமானச் சேவையை ரத்து செய்யதுள்ளதாக 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனம் நேற்று அறிவித்தது. அந்தச் சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை வெளிவரவில்லை.
விமானச் சீட்டுகளை வாங்கிய பயணிகளுக்கு அந்த சீட்டுகளுக்கான பணம் திருப்பித் தரப்படும் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதளிடம் தெரிவிக்கப்பட்டது. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துலகச் சந்தையைக் கைப்பற்றும் ஆர்வத்தில், 'ஜெட் ஏர்வேஸ்' தனது சக்திக்கு மீறி பெரிய ரக விமானங்களை வாங்கியது. அதுவே அந்நிறுவனத்தின் அழிவுக்கு வித்திட்டதாக விமானத்துறை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
26 ஆண்டுகளாக இயங்கி வரும் 'ஜெட் ஏர்வேஸ்'க்கு கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்திய விமானத்துறையில் தாக்குப்பிடிப்பது மிகக் கடினம் என்பதை ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சி காட்டுவதாக அந்தத் துறையினர் கூறுகின்றனர். விமானச் சீட்டு விலையை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, அதனை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்களால் இழப்பு நேரிட்டாலும், விமான நிறுவனங்கள் சீட்டுகளை மிகக் குறைந்த விலையில் விற்பது வழக்கம். எனவே, விமான நிறுவனங்கள் இந்தத் துறையில் வெற்றிகரமாக நீடித்து நிலைப்பது குதிரைக்கொம்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.