புதுடெல்லி: இந்தியாவில் தங்கத்துக்கான தேவை எப்போதுமே அதிகமாகவே இருக்கும். பொதுமக்களின் ஆர்வம் ஒருபக்கம் இருந்தாலும் வரி ஏய்ப்பு செய்பவர்களும் வருமானக் கணக்கை மறைப்பவர்களும் தங்கத்தை வாங்கி குவிப்பர். இவ்வாறு கணக்கில் காட்டப்படாத தங்கத்தை வைத்திருப்போருக்கு பொதுமன்னிப்பு வழங்க மத்திய நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
தங்கத்தைப் பதுக்கியவர்கள் வருமான வரித்துறையிடம் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்தால் பொதுமன்னிப்புத் திட்டத்தின்கீழ் வரியும் அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டு சிறைத்தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியிடம் பேச்சு நடத்திய பிறகு இந்த பொது மன்னிப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும் இறுதி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் தேவையையும் இறக்குமதியையும் குறைக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டு சில திட்டங்களை அறிமுகம் செய்தார். அதன் ஒரு பகுதியாக அசல் தங்கத்துக்குப் பதில் தங்கப்பத்திரங்கள் வெளி யிடப்பட்டன. ஆயினும் இத்திட்டத்தால் பலன் கிட்டவில்லை. அதனைத் தொடர்ந்து பொதுமன்னிப்பு யோசனை பிறந்துள்ளது.