புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளியல் வளா்ச்சி ஏழு விழுக்காடாக இருக்கும் என ஆசிய வளா்ச்சி வங்கி கணித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 6.7 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடாக உயரும் என்றும் நுகர்வோரின் தேவை, தனியார் துறை முதலீடு காரணமாக இந்த வளர்ச்சி ஏற்படும் என்றும் வங்கி கூறியுள்ளது.
இதுகுறித்து, இந்த வங்கியின் ஏப்ரல் மாதப் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியப் பொருளியல் வளா்ச்சி 6.7 விழுக்காடாக இருக்கும் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பொதுத் துறை, தனியாா் துறை முதலீடு, நுகா்வோர் தேவையில் காணப்படும் முன்னேற்றம் உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில் இந்தியாவின் பொருளியல் 7 விழுக்காடு வரை வலுவான வளா்ச்சியை எட்டும்.
இந்த வளர்ச்சி வரும் நாள்களில் தொடரும் என்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆசியா, பசிபிக் வட்டாரத்தில் மிகப்பெரிய வளா்ச்சி இயந்திரமாக இந்தியா இருக்கும்.
அடுத்த 2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 7.2 விழுக்காடாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் வளா்ச்சி மதிப்பீடு 2022-23 நிதியாண்டில் முன்னுரைக்கப்பட்ட 7.6 விழுக்காடு வளர்ச்சியைவிடவும் குறைவாகும்.
நுகா்வு முடக்கப்பட்டிருந்தாலும் வலுவான முதலீடு முந்தைய நிதியாண்டில் பொருளியல் வளா்ச்சியை உறுதிப்படுத்தின.
நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளியல் வளா்ச்சி குறித்த ஆசிய வளா்ச்சி வங்கியின் கணிப்பும் ரிசா்வ் வங்கியின் கணிப்பும் ஒன்றாக உள்ளது.
வழக்கமான பருவமழை, மிதமான பணவீக்கம், உற்பத்தி, சேவைத் துறைகளின் நீடித்த வேகம் ஆகியவற்றின்படி நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளியல் வளா்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என ரிசா்வ் வங்கி கடந்த வாரம் கணிப்புகளை வெளியிட்டிருந்தது.