லங்காவி: மலேசியாவில் லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நேற்று கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஏஷியா விமானம் அவசரமாக தரையிறங்கியது.
புறப்பட்ட மூன்று நிமிடங்களில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது. அந்த விமானத்தில் 151 பயணிகளும் விமானப் பணியாளர்கள் ஐவரும் இருந்தனர். AK9327 எனும் எண் கொண்ட அந்த விமானம் நேற்று காலை 9.30 மணியளவில் புறப்பட்ட அதே லங்காவி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அந்த விமானத்தில் இருந்த அனைவரும் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஜெஃப்ரி ராம்லி தெரிவித்தார்.
புறப்பட்ட சற்று நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினையால் அது அவசரமாக தரையிறங்கியதாக அவர் கூறினார்.
காலை 9.20 மணிக்கு விமானத்தில் தொழில்நுட்பப் பிரச்சினை இருப்பதாக லங்காவி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக திரு ராம்லி கூறினார்.
உடனடியாக விமான நிலையத்தின் தீயணைப்பு, மீட்புக் குழுவைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை.