பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் அடுத்த 10 நாட்கள் வரை பயணிகளை அமரவைத்து விமானங்களை இயக்கலாம் என்று இந்திய அரசுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கும் உச்ச நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
அனைத்துலக விமானப் பயனத்துக்கும் இது பொருந்தும் என்று கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில், “வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவரும் ‘வந்தே பாரத் மிஷன்’ திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமானங்களில் இந்த பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நடுப்பகுதி இருக்கையில் பயணிகள் அமரவைக்கப்பட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கான புகைப்பட ஆதாரத்தையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், “ஜூன் 2ஆம் தேதிக்குள் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆகியவை பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை நடுப்பகுதி இருக்கையை நிரப்பத் தடை விதிக்கப்படுகிறது,’’ என்று உத்தவிட்டது.
இந்தத் தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசும், விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் அவசர மனுவைத் தாக்கல் செய்து விசாரிக்கக் கோரின. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏஎஸ். போபண்ணா, ஹிர்ஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் காணொளி வழியாக நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதில் சிறந்த வழிமுறை என்பது சமூக விலகல் அல்ல, பரிசோதனைதான். இருக்கை வேறுபாடோ அல்லது இடைவெளியோ அல்ல.
“நடு இருக்கை காலியாக விட வேண்டாம் என்று வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்தபின்புதான் இருக்கையை நிரப்ப முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் புதிய சுற்றறிக்கையும் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. குடும்பத்துடன் வருபவர்கள் 3 பேராக இருக்கையில் அமரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, “சமூக விலகல் இல்லாமல் அமர்ந்திருந்தால் நிச்சயம் வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கும்,’’ எனத் தெரிவித்தார்.
“ஜூன் 6ஆம் தேதி வரை அனைத்து முன்பதிவும் முடிந்துவிட்டது. நடுப்பகுதி இருக்கையும் நிரப்பப்பட்டுவிட்டது,” என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, “ஜூன் 6ஆம் தேதி வரை அதாவது அடுத்த 10 நாட்கள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் பயணிகளை அமரவைத்துக்கொள்ளலாம்,” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே குறிப்பிட்டதுடன், “பயணிகளின் நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏர் இந்தியா மட்டுமல்லாமல், மற்ற விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.