பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் காலமானார். அவருக்கு வயது 78.
கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் அவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
1971ஆம் ஆண்டு வெளிவந்த ‘குட்டி’ (Guddi) என்ற இந்தித் திரைப்படத்தில் வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி’ என்ற பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகராக வாணி ஜெயராம் அறிமுகமானார். அந்தப் பாடல் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து பல மொழிகளில் இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வாணி ஜெயராம்.
‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக அவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றார்.
அண்மையில் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
திரையுலகினர், ரசிகர்கள் ஆகியோர் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.