லண்டன்: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஆர்சன லின் கனவு ஞாயிற்றுக்கிழமை தகர்ந்தது.
வில்லனாக உருவெடுத்த பிரைட்டன் அண்ட் ஹோப் அல்பியனிடம் 3-0 என்னும் கோல் எண்ணிக்கையில் ஆர்சனல் வீழ்ந்தது.
முன்னதாக நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் எவர்ட்டனை மான்செஸ்டர் சிட்டி வென்று நான்கு புள்ளிகள் முன்னேறியது. அதனால் இன்னும் ஓர் ஆட்டத்தில் வென்றால் போதுமானது என்று ஆர்சனல் மிதப்பில் இருந்தது.
பிரைட்டனுடன் ஆட்டம் தொடங்கியதும் அந்த மிதப்பு தொடர்ந்தது. எளிதில் கோல் போட்டுவிடலாம் என்ற நினைப்பு ஈடேறவில்லை. முதல் பாதி முழு வதும் வெறும் போராட்டத்திலேயே முடிந்தது. எந்தத் தரப்பும் கோல் போடவில்லை.
இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் பிரைட்ட னின் ஜூலியோ என்சிஸோ போட்டியின் முதல் கோலைப் போட்டார்.
ஆட்டத்தின் விறுவிறுப்பு அப்போதுதான் தொடங்கியது. இரண்டாவது கோலை போடும் பிரைட்டனின் முயற்சிகளை ஆர்சனல் வீரர்கள் தடுக்க பெரு முயற்சிகளை எடுத்தனர்.
இருப்பினும், பிரைட்டன் அணியினரின் வேகம் குறையவில்லை. 85வது நிமிடத்தில் டெனிஸ் உண்டவ் அந்த அணியின் இரண்டாவது கோலைப் புகுத்தினார். ஆர்சனல் வீரர்களின் உற்சாகம் குறையத் தொடங்கியது.
போட்டி முடிய மூன்று நிமிடங்கள் இருந்த வேளையில் பிரைட்டனின் மூன்றாவது கோல். இம்முறை கோல் அடித்தவர் பெர்விஸ் எஸ்துபினான்.
81 புள்ளிகளுடன் சிட்டியை விட 4 புள்ளிகள் பின்தங்கிய ஆர்சனலுக்கு இன்னும் இரண்டு போட்டிகளே எஞ்சியுள்ளன. நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டுடன் சனிக்கிழமை ஆர்சனல் மோதும் ஆட்டம் சிட்டியின் அடுத்த நகர்வுக்கு முக்கியமானது. 58 புள்ளிகளைப் பெற்றிருக்கும் பிரைட்டன்வசம் இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன.
ஆர்சனலின் சொந்த மண்ணில் போட்டி நடைபெற்றதால் அதன் ரசிகர்கள் ஏராளமாகத் திரண்டிருந்தனர். ஆயினும் பிரைட்டன் 2வது கோலைப் புகுத்தியதுமே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கினர். மூன்றாவது கோல் விழுந்தபோது திடல் காலியானது.
தோல்வியை எதிர்பார்க்காத ஆர்சனல் நிர்வாகி மைக்கல் ஆர்டெட்டா, “இரண்டாம் பாதியில் எனது வீரர்கள் ஆடிய விதம் ஏற்கத்தக்கதாக இல்லை. தோல்விக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.