உலகெங்கும் அண்மைக்காலமாக முதியோரிடையே வாழ்க்கையில் பிடித்தமின்மை அல்லது வெறுமை உணர்வு அதிகரித்துவருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது தங்கள் வாழ்க்கை விரைவில் முடிவடைவதை இவர்கள் தீவிரமாக விரும்புகிறார்கள்.
இவர்களில் எவரும் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர். மனநலம் பாதிக்கப்பட்டோரும் அல்லர். அதேவேளையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. ஆனால் மரணத்தை வரவேற்க இவர்கள் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலை நாடுகள் பலவற்றிலும் இத்தகைய முதியோர்கள் இருக்கிறார்கள். விளிம்புநிலையில் இருக்கும் இவர்கள், நகரும் கப்பலில் தன்னைச் சுற்றிலும் அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை இருப்பதுபோலவும் தான் மட்டும் அக்கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குப் பொருளைப்போல உணர்வதாக வும் கூறுகின்றனர்.
வாழ்க்கையில் பிடித்தமின்மை என்பது விரக்தியிலிருந்து மாறுபட்டது. விரக்தியால் வெறுப்பு தோன்றும். ஆனால் பிடித்தமின்மை அல்லது வெறுமை என்பது வாழ்க்கையை வெறுப்பதால் ஏற்படும் உணர்வு அன்று.
நெஞ்சுக்கு நெருக்கமான உறவின் மறைவாலோ ஏதோ ஓர் இழப்பாலோ ஏமாற்றத்தாலோ தோல்வியாலோ தாங்க இயலாத வலியாலோ ஏற்படும் துக்கமும் அன்று.
இனி இவ்வுலகில் இருந்து ஆகப் போவது ஒன்றுமில்லை என்று கருதுவதால் ஏற்படும் ‘வாழ்ந்தது போதும்’ என்ற அயர்வு இது.
வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்படுவதும் அதனால் ஒருவர் வெறுமையாக உணர்வதும் இயல்பே என்றாலும் குறிப்பிடத்தக்க காரணம் ஏதுமின்றி இனி வாழ்வதற்கும் உயிர்நீப்பதற்கும் தன்னைப் பொறுத்தவரையில் வித்தியாசம் இல்லை என்று ஒருவர் நினைப்பதை இயல்பு என்று நாம் கடந்துவிட முடியாது.
இது வேறேதோ நாட்டில் நடப்பது என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவில் மூப்படைந்து வருவதை நாம் அறிவோம். ஆக வாழ்க்கையில் பிடித்தமில்லாத முதியோர்கள் குறித்த சிந்தனையும் அதற்கான தீர்வுகளைக் காண்பதும் நமக்கு முக்கியமாகிறது.
முதியவர் என்றால் வேலைபார்க்கும் வயதைக் கடந்திருப்பார். காலையில் அரக்கப்பரக்க எழுந்து, ஓடி ஓடி வேலை செய்த நாள்கள் இனி இல்லை. காலை எழுந்த சிறிது நேரத்திலேயே நாள் முழுக்க செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற அயர்வு அவருக்கு ஏற்படும்.
ஒருநாளில் அவரவர் வயதுக்கேற்ப மனிதர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளின் அளவை வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, உடல் ஆற்றலுக்கு எந்தெந்த வயதினர் எவ்வளவு கால்சியம் சத்தை ஒருநாளில் உட்கொள்ள வேண்டும் என்ற மதிப்பீடு உள்ளது.
இதைப்போல் மன ஆற்றலுக்கும் உணர்வு ரீதியான ஆற்றலுக்கும் ஒருவர் ஒருநாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்று யாராலும் கணக்கிட முடியாது.
உடலுக்கு அன்றாடம் போதிய அளவில் ஊட்டச்சத்து கிடைத்தாலும் மனத்திற்குத் தேவையான புத்துணர்வு கிடைக்காத நிலையில் ஏற்படுவதுதான் வெறுமை உணர்வு.
தான் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது, நோக்கமில்லாதது என்ற எண்ணம் தோன்றும்போது ஒருவருக்கு வாழ்க்கையில் பிடித்தமின்மை ஏற்படுகிறது.
அர்த்தமற்ற வாழ்க்கை என்றாகும்போது ஊக்கம் தொலைந்துவிடுகிறது. அது, வாழவேண்டும் என்ற வேட்கையைச் சிறிது சிறிதாக மங்கச் செய்கிறது.
விழிப்புணர்வு, கற்பனை ஆற்றல், படைப்பாற்றல் போன்றவையெல்லாம் அவரிடமிருந்து விடைபெற்று விலகிவிடுகின்றன. எந்த ஒன்றையும் செய்வதாலோ, அடைவதாலோ ஏற்படக்கூடிய உற்சாகம் மறைந்துவிடுகிறது.
வெறுமையே தொடர்கிறது. எதிலும் ஆர்வமின்மை. வாழ்க்கை வறண்டுவிட்டதான உணர்வு. கடிகாரம் மெதுவாகச் செல்கிறதோ என்ற சலிப்பு. ‘முடியாப் பகலே, விடியா இரவே’ என்று நாள்களைக் கடத்தும் நிலையில் ‘மணி என்னவாக இருந்தால்தான் என்ன’ என்ற விரக்தி.
இத்தகைய நிலைக்கு இவர்களை இட்டுச்சென்றது எது என்று ஆராய்ந்தால், தனிமை, புறக்கணிப்பு, ஒரு காலத்தில் விற்பன்னர்களாக இருந்த அதே துறையில் இனி தனக்கென அடையாளம் இல்லை என்ற உணர்வு, நீண்டநாள் வாழ்ந்தால் அன்றாடக் கடமைகளுக்குக்கூட யாரையேனும் சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டு
விடுமோ என்ற அச்சம் எனப் பல உணர்வுகளின் கலவையாகத்தான் வாழ்க்கையில் பிடித்தமின்மை ஏற்படுகிறது.
இந்த உணர்வுகளுக்குத் தீர்வுகாண முடிந்தால் முதியோரின் வெறுமை உணர்வைப் போக்கி அவர்களும் துடிப்புமிக்க நம் சமுதாயத்தில் இணைந்து பங்காற்றி பொருளுள்ள வாழ்க்கையை வாழ உதவமுடியும்.
நம்மைச் சுற்றியுள்ள முதியவர் யாரேனும் வெறுமை உணர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரின் தனிமையைப் போக்க முயலலாம்.
அவரது அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று உணரவைக்கும் வகையில், காதுகொடுத்துக் கேட்பதும் அவரோடு நேரம் செலவிடுவதும் முதியவரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படுத்தக்கூடும்.
தொண்டூழிய அடிப்படையில் அறிமுகமற்ற முதியவர்களின் துயரைப் போக்க இளையர்களும் பெரியவர்களும் நேரம் ஒதுக்கலாம்.
அறிவியலும் மருத்துவமும் இன்று மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்கும் வகைகளைக் கண்டறிந்து வெற்றிகரமாகச் சாதித்துள்ளன.
ஆனால் வாழ்க்கைத் தரத்தை உயர்நிலையில் வைத்திருப்பது என்பது மனிதர்களின் மனம் தொடர்பானது.
சுற்றியிருப்போர் கைகொடுத்தால் மட்டும் போதாது. முதியோரும் முழுமனதாகச் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேவையற்ற சிந்தனைகள் எனும் சிலந்தி வலைகள் மூளையை முடக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டும். ‘நமக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்பதை நினைத்துப் பார்த்து ஆக்ககரமான சிந்தனைகளுக்கு மட்டுமே சிந்தையில் இடம்தர வேண்டும்.
இதுவரை வாழ்ந்த வாழ்க்கை போர்க்களமோ, பூக்களமோ அதில் பெற்ற தனிப்பட்ட அனுபவங்களை, அந்த அனுபவங்களால் தாங்கள் கற்ற பாடங்களை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகிற்கு வாழும்வரை வழங்குவேன் என்று உறுதிபூண்டு செயல்பட வேண்டும்.
உற்சாகத்தை மீட்டெடுக்கக்கூடிய அம்சங்களை அடையாளம்கண்டு மீள்திறனைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். மனமிருந்தால் இதற்கு மார்க்கம் இல்லாது போகாது.