சோல்: அணுவாயுதத் தற்காப்பு உத்திக்கான வழிகாட்டி முறைகளை அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் இணைந்து உருவாக்க அமெரிக்காவும் தென்கொரியாவும் திட்டமிடுகின்றன.
வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை முறியடிக்க ஒருங்கிணைந்த முறையை உருவாக்குவது அதன் நோக்கம் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் சனிக்கிழமை (டிசம்பர் 16) குறிப்பிட்டது.
தென்கொரியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கிம் டே-ஹயோ அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய விவரங்களின் அடிப்படையில் அந்நிறுவனம் அச்செய்தியை வெளியிட்டது.
வடகொரியாவின் அணுவாயுதங்கள் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் முறை உள்ளிட்டவற்றை அந்தப் புதிய வழிகாட்டுதல்கள் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடத்தத் திட்டமிட்டு இருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது அணுவாயுத செயல்பாட்டுப் பயிற்சிகளையும் அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்த்துக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுவதாக அச்செய்தி குறிப்பிட்டது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையை இந்த டிசம்பரில் வடகொரியா மீண்டும் மேற்கொள்ளக்கூடும் என்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 15) திரு கிம் தெரிவித்து இருந்தார்.