ஆட்ட முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்யும் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் முன்னாள் காற்பந்து வீரர்கள் நால்வருக்கு விதிக்கப்பட்ட வாரழ்நாள் தடை நீக்கப்படுவதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் வியாழக்கிழமையன்று தெரிவித்தது.
தங்கள் வாழ்நாள் தடையை நீக்க பரிசீலிக்குமாறு மனாப் ஹமாட், மிஸான் உலோட், அப்துல் மாலிக் முகம்மது, ஸுல்கிஃப்லி கர்தோயோகோ ஆகிய நால்வரும் சங்கத்திடம் மேல்முறையீடு செய்திருந்ததாக எஃப்ஏஎஸ் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அவர்கள் நால்வர் மீதும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் ஒழுங்குக் குழு 1995 முதல் 1998 வரையிலான காலத்தில் வாழ்நாள் தடையை விதித்தது.
1995ல் இரண்டு உள்ளூர் காற்பந்தாட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்யும் மோசடியில் மிஸான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 1997ல் பாலஸ்டியர் சென்ட்ரல் குழுவுக்கும் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுக்கும் இடையிலான ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்யும் மோசடியில் மனாப்பும் அப்துல் மாலிக்கும் ஈடுபட்டது நிரூபணமானது. அவர்கள் மூவருக்கும் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் முன்னாள் அனைத்துலக காற்பந்து வீரரான ஸுல்கிஃப்லி, காற்பந்தாட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்யும் மோசடியில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் மனாப், மாலிக் இருவரும் குற்றம் புரிவதற்குத் துணையாக இருந்ததற்காக அவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.