கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர், சாபா உட்பட ஆறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் அவதியுறுகின்றனர்.
டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படி, 28,310 பேர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிளந்தான் ஆக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் என்று மலேசியாவின் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு (நட்மா) கூறியது. அங்கு வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 17,466 பேர் 89 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
திரெங்கானு, பாகாங் ஆகியவற்றில், தற்காலிக முகாம்களில் தங்கியிருப்போர் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
திரெங்கானுவில் உள்ள 113 முகாம்களில் இன்னும் 10,103 பேர் தங்கியுள்ளனர்.
பாகாங்கில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது நிவாரண முகாம்களில் 485 பேர் தங்கியுள்ளனர். கேமரன் மலையில் உள்ள ஒரு நிவாரண முகாமில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் தங்கியுள்ளனர். அவர்கள் அங்கு நடந்த நிலச்சரிவை அடுத்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டவர்கள் என்று ‘நட்மா’ கூறியது.
சாபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 169 பேர் மூன்று முகாம்களில் தங்கியுள்ளனர். ஜோகூரில் ஒரு நிவாரண முகாமில் 83 பேர் தங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.
இவ்வேளையில், திரெங்கானு, பாகாங், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.