புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கிண்ண ஹாக்கி தொடரில் இந்தியா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி 2=2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆண்களுக்கான 14வது உலகக் கிண்ண ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம் அணிகள் நேற்று முன்தினம் மோதின.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் முதல் கோலை அடித்தார். முதற்பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் போடாததால் பெல்ஜியம் 1=0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் 39வது நிமிடத்திலும், சிம்ரன் ஜித் சிங் 47வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். இதனால் இந்தியா 2=1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால், 58வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்ட் கோல் அடித்ததால் ஆட்டம் சமனானது. பெல்ஜிய அணியு டன் தான் பொருதிய கடைசி எட்டு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜிய வீரர்களுடன் பொருதும் இந்திய வீரர் மன்பிரித் சிங் (நடுவில்). படம்: இபிஏ