நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிடிபட்ட பயங்கரவாதி, 'கன் சிட்டி' எனும் துப்பாக்கி விற்கும் இணையத்தளத்திலிருந்து துப்பாக்கிகளை வாங்கியதாக அந்தக் கடையின் உரிமையாளர் உறுதிசெய்துள்ளார்.
போலிஸ் வகுத்துள்ள முறையான அடையாளச் சோதனை மூலமே அந்த ஆடவருக்கு 'கன் சிட்டி' துப்பாக்கிகளை விற்றதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் டிப்பல் கூறியுள்ளார்.
நான்கு 'ஏ' பிரிவு ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இந்தக் கோரச் சம்பவத்திற்குப் பின்னர் இன்று முதல்முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதில் தலையாயப் பணியாகத் துப்பாக்கிச் சட்டத்தைக் கடுமையாக்கப்போவதாகப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் கடப்பாடு கொண்டுள்ளார்.
இந்தப் பயங்கரவாதச் சம்பவத்தில் இதுவரை 50 பேர் மரணமடைந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பிரென்டன் டர்ரன்ட் பள்ளிவாசலுக்குள் புகுந்து துப்பாக்கியைக் கொண்டு அங்கிருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினான்.
கடந்த சனிக்கிழமை அவன் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
ஏப்ரல் ஐந்தாம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று போலிஸ் படை தெரிவித்தது.