உள்ளூர் படப்பிடிப்புக்காக நாளை (டிசம்பர் 8) ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை சாலை தடங்கள் மூடப்பட்டிருக்கும்.
‘ரோல்லா’ எனப்படும் உள்ளூர் காணொளி தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை மேற்கொள்ள இந்த ஏற்பாடு வகை செய்யும்.
இணைய காணொளி ஒன்றை எடுப்பதற்காக ராபின்சன் சாலையில் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
சாலை தடங்கள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் போலிஸ், அவசர வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். வாகனமோட்டிகளுக்கு வழிகாட்ட துணை போலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர்.
அந்தப் பகுதியில் கார் நிறுத்தி வைக்கப்படுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கூறிய போலிஸ், இடையூறு விளைவிக்கும் விதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அவை அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் என்று சொன்னது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity